Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, 19 July 2012

ஏனோ உறக்கமில்லை எனக்கு...




கருக்கிருட்டு தர்பார் நடத்தும்
அர்த்தஜாம வேளை.
ஏனோ உறக்கமில்லை எனக்கு...

நட்சத்திரங்களை எண்ணத் தொடங்குகிறேன்
உன் நினைவோடு!

முடிக்கும்முன்பே
விடிந்துவிட்டது பொழுது.
அதனாலென்ன...?

மொட்டைமாடியில்
இன்றும் எண்ணுவேன்
நட்சத்திரங்களோடு  உன்னையும்...!



Tuesday, 19 June 2012

பார்த்தேன்...ரசித்தேன்...


மர இலைகளுக்கிடையே வழிதேடிய
ஒளிக் கீற்றுகளை ரசித்தேன்.

புல்லின் நுனியில் ஊஞ்சலாடும்
பனித்துளியை ரசித்தேன்.

விருந்தினர்போல் வந்துசெல்லும்
வானவில்லை ரசித்தேன்.

வான்வெளியில் விதைக்கப்பட்ட
முத்துக்களை ரசித்தேன்.

ஓசையில்லாமல் தேகம் தழுவும்
தென்றலை ரசித்தேன்.

வண்ணங்களைச் சுமந்துவரும்
வண்ணத்துப் பூச்சியை ரசித்தேன்.

மழலைகள் பேசும்
புரியாத மொழியையும் ரசித்தேன்.

இரவில் கண்ணாமூச்சியாடும்
மின்மினிகளை ரசித்தேன்.

எல்லாவற்றையும் ரசித்தேன்...
உன்னை ரசிக்கும் வரை!














நன்றிகள்: 
1. பட்டாம்பூச்சி படத்திற்காக... முத்துச்சரம் ராமலக்ஷ்மிக்கு.
2. மற்ற அனைத்திற்கும்...  கூகுள் ஆண்டவருக்கு.

Friday, 15 June 2012

மா கனல்கள் !



இந்திரனின்
இச்சைக்கு இணங்க...
நாங்கள் அகலிகைகளல்ல !
சிதையேறி
சிறந்தவளென நிரூபிக்க...
நாங்கள் சீதைகளுமல்ல !

மாதவியிடம் மயங்கிய
கோவலனை மன்னிக்க...
நாங்கள் கண்ணகியுமல்ல !
ஐவர் தலைவன்
அவையில் சூதாட...
நாங்கள் பாஞ்சாலியுமல்ல !

அடிமைத்தளையகற்றி,
தன்மானங்காக்க...
புரட்சிக் கொடியேந்தி வரும்
நாங்கள் -
மா கனல்கள் !

ஊசிக்குறிப்பு : 
1990-களின் இறுதியில், எனது கல்லூரிப் பருவத்து வரிகள் இவை.


Wednesday, 6 June 2012

எனக்கு மட்டும் நான்!



சிவப்புமல்ல...வெளிருமல்ல...
பச்சைத் தமிழனின் கருப்பு நிறம்.

கலையாமல் வகிடெடுத்து
உருக்குலையாமல் படிந்த கேசம்.

முட்டையையும், சட்டத்தின்
ஓட்டையையும் நினைவுபடுத்தாத
ஆழமான விழிகள்.

நீளமுமல்ல...அகலமுமல்ல...
நேர்த்தியான நாசி.

காதோரம் வரை கிழியாமல்
அளந்தெடுத்த அதரங்கள்.

ஆணென்ற அடையாளத்திற்கு
அழகாய் அரும்பு மீசை.

பிரிவென்பதே இல்லாமல்
பிணைந்து இருக்கும் வளைபுருவங்கள்.

 என -

அழகாய்த்தான் தெரிகிறேன்
கண்ணாடியில் -
எனக்கு மட்டும் நான்!

ஊசிக்குறிப்பு:  
பள்ளிப்பருவத்தின் விளிம்புகளில், என் தாழ்வுமனப்பான்மையில்  எழுதப்பட்டது இது.
பின்னாட்களில், நல்ல நண்பர்களாலும், புத்தகங்களாலும் அதிலிருந்து வெளிவந்திருக்கிறேன்.
இப்போது இந்த புகைப்படத்திலிருக்கும் கருத்துதான் எனதும்.

Thursday, 31 May 2012

பந்தம் எப்போதும் தொடர்கதைதான்...



என் -  
தொப்புள் பந்தம்
தொட்டிலில் அழுகிறது.
பசியை அடக்க
பாய்ந்து வா என்று!

என் -
கட்டில் பந்தம்
கனவோடு காத்திருக்கிறது.
காமத்தீயை அணைக்க
காதல் நீராய் வா என்று!

என் -
கடமை பந்தம்
கர்ஜனையோடு விரட்டுகிறது.
இருக்கும் வேலைகளை
இயந்திரமாய் முடி என்று!

என் -
உரிமை பந்தம்
உலக்கையை இருக்கிறது.
கட்டிக்கொடுத்ததோடு
கடன் தொலைந்ததென்று!

என் -
மூளை பந்தம்
முணுமுணுக்கிறது வேதனையாய்.
நால்வரும் வேண்டும்...
நான் என்ன செய்யவென்று!




 

Wednesday, 23 May 2012

முரண்பாடான வாழ்க்கை


 
நிலவில் கறை.
கதிரவனில் கரும்புள்ளி.
துன்பத்தில் இன்பம்.
தடைக்கல்லில் படிக்கல்.

தேடிப்பார்த்தால்
முரண்பாடுகளைப் போலவே
எல்லா இடங்களிலும்
ஒளிந்திருக்கிறது வாழ்க்கை.

ஒருவேளை -
முரண்பாடுகள் தானோ வாழ்க்கை?



Wednesday, 16 May 2012

கோபமே நீயாகிடும் வேளை...



தீயாகவோ, புயலாகவோ...
திருக்கைமீன் வாலாகவோ...
பூவாகவோ, புன்னகையாகவோ...
புத்தம்புது விஷமாகவோ...
உன் கோபம் 
எப்படி வருமென்று எனக்குத் தெரியாது!!

எப்போது வரும்?
எதற்கு வரும்?
எவ்வளவு வரும்?
உனக்கும் தெரியாது!!

கோபமே நீயாகிடும் சில வேளைகளில்...
வெண்ணைக்கட்டியாக அனலில் விழுந்து
உருகித் தொலைகிறேன் நான்.




Saturday, 21 January 2012

நீ பிறந்தாய்... தை பிறந்தது...!

காற்று ஊதி வாயில் கன்னக் கொழுக்கட்டை பிடித்து
தின்னத்தந்த சிநேகமல்ல நம்முடையது!
ஆனாலும் - சொர்க்க வாசலில்
காவல் தேவதைகள் கண்ணயர்ந்த நேரம்...

வண்ணச் சிறகுகளை அசைத்து, 
வானத்தை பூமிக்கு அழைக்கும்
பட்டாம்பூச்சியின் அழகில் மயங்கி 
சிறகுகளை சிலுப்பிக் கொண்டு
தரணிக்கு வந்து எனக்குத் துணையான நட்சத்திரத் தருணி நீ!

முகத்தில் அறையும் குளிரில் நனைந்தபடி
உன் நினைவுகளில் கண்மூடி லயித்திருந்த
அந்த காலைத் தென்றல் பொழுதில்...
காற்றில் உன்வாசம் மிதந்து வரக் கண்மலர்ந்தேன்!

கால்களில் மகரந்தங்கள்.
செல்லும பாதையெங்கும் சுகந்தங்கள்.
வானத்தை அளந்தபடி ஒரு வண்ணத்துப் பூச்சி...!
உள்ளுக்குள் துடிதுடித்த உந்துதலில்,
விரட்டிச்சென்று பிடித்தேன் அந்த பறக்கும் வானவில்லை!

அதன் ரீங்காரத்தில் உன் பெயரின் வாசம்.
அந்தச் சிறகுகளின் படபடப்பில் என்றுமில்லா உற்சாகம்.
சற்றே அதட்டியதில் சட்டென உளறிவிட்டது
இன்று நீ பூமிக்கு வந்த நாளென!
அட...!

உன்னிடம் சேர்க்கச் சொல்லி
மலர்கள் கொடுத்தனுப்பிய மகரந்தங்களோடு,
தன உறிஞ்சுகுழல்களில் சேமித்த தேனோடு (ம்)
பறந்து கொண்டிருந்தது அந்த இயற்கையின் ஓவியம்!
விடுவித்துவிட்டு, விரல்களில் பிசுபிசுத்த வண்ணங்களோடு
விசனத்தில் ஆழ்ந்தேன்!

மலர் - மகரந்தம்,
வண்ணத்துப் பூச்சி - தேன்,
நான் - ?

காய்க்காத மரங்களெல்லாம் நீர்ப்பழம் உதிர்க்கும்
அந்த மழைநாளின் மதியத்தில்
உனக்கான வாழ்த்துகளைத் தியானித்தபடி
வார்த்தைகளுக்குள் மலரத் துவங்கினேன்!

நதிகளின் கதகளி, மரகத வயல்வெளி, அலாரச் சேவல், அதிகாலைத் தெரு,
சலித்த வெயிலடித்துப் புழுதி படிந்த தெருவில் பெருகும் சாரல் புன்னகை,
மென்காற்றில் மிதக்கும் இளம்மழை - என
இயற்கையில் புகுந்து பொறுக்கி எடுக்கிறேன் உனக்கான வாழ்த்துகளை!

வலுகுறைந்து பெய்யும் மழையில் நனையாமலிருக்க
தாழ்வாரத்தில் ஒதுங்கிய பறவையின் சிறகிலிருந்து 
சிலிர்த்துத் தெறிக்கின்றன உனக்கான வாழ்த்துகள்.

முற்றத்து நீரில் யாரோ விட்ட காகிதக்கப்பல் 
குடை சாய்ந்து வருகிறது உனக்கான வாழ்த்துகளோடு...
நீலவான் தீவுகளாய் மிதக்கும் முகில்களும்
மென்மையாய் வாழ்த்திக்கொண்டிருக்கின்றன உன்னை.

இவற்றோடு -

மழைக்காதலனால் பூமி பிரசவித்த இன்ஸ்டன்ட் காளானுக்குள்
ஒருகண்ணில் குடையோடும், மறுகண்ணில் மழையோடும் நான்...!
காலத்தின் கைகளில் எப்போதும் அதிர்ந்துகொண்டேயிருக்கும்
கவிதை வீணையிலிருந்து,
உனக்கான வாழ்த்துகள் முடிவில்லாத வார்த்தைகளாய்
எனக்குள் விழத்துவங்கின.
எப்போதும் பாதியில் அறுந்து விழும் என் நினைவுகள் இப்போதும்...

எனக்குள் விழுந்து, தெறித்து,
நழுவிச் சென்ற ஒரு வார்த்தையைத் தேடித் போனேன்.
ஒரு இறகு போல் பறக்க ஆரம்பித்த வார்த்தை,
காற்றில் பறவைபோல் நீந்த ஆரம்பித்தது.

மழை மேகங்களூடே நின்று
தேவதைகள் ஆசீர்வதித்த ஒரு நொடியில்,
என் மடியில் வந்து சேர்ந்தது அந்த வார்த்தை!

ஒற்றை வார்த்தையைத் திறந்தேன் - அதனுள் ஏகப்பட்ட எழுத்துகள்.
ஒற்றை எழுத்தைத் திறந்தேன் - அதனுள் எண்ணற்ற வார்த்தைகள்!

உனக்கான வாழ்த்துகளை நிறைவு செய்ய
தொடர்ந்துகொண்டிருக்கிறது என் தேடல்!

- சிசு


ஒரு நன்றியும், மன்னிப்பும்:
  • இயற்கையின் வருணனைகளை திரைப் பாடல்கள் மூலம் பகிர்ந்துகொண்ட திரு வைரமுத்து அவர்களுக்கு நன்றி.
  • மிகச் சரியாக ஒரு வார காலதாமதத்திற்குப் பின் பதிவேற்றப்பட்டிருக்கும் இந்த வாழ்த்துக்கு உரியவரிடம் அதற்கான மன்னிப்பு.

Thursday, 22 December 2011

பாழும் தூக்கம் வந்தாலென்ன...




ன் நினைவுகளில் 
தூக்கம் தொலைத்துத் 
தவிக்கிறேன் நான்.

அயர்ந்த தூக்கத்தில் 
திடீரென விழித்தாலும்
எனக்கான கவிதையைப் 
புனைகிறாய் நீ!

பாழும் தூக்கம் 
எனக்கும் வந்தாலென்ன...

நானும் உனக்கொரு
கவிதை நெய்யலாமே!

Wednesday, 21 December 2011

புன்னகைப் பொழுது




லைபேசியின் தொடுதிரையில்
உன் பெயரை ஸ்பரிசிக்கும்
எல்லாப்பொழுதுகளிலும்
உயிருக்குள் 
அரும்புகள் கூட்டி மலர்கிறது 
ஒரு புன்னகை.


Tuesday, 15 November 2011

அடுத்த விடுமுறைக்கான ஏக்கம்...!




ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையே
அனல்காற்று வீசும் ஒரு மாலையில்,
பிறப்பிடம் விட்டு பிழைப்பிடம் நோக்கி
துவங்குகிறது ஒரு நெடும்பயணம்.

இனிமையான விடுமுறை நிகழ்வுகளில்
இலகுவாகவும், கனமாகவும் ஒருசேர உணர்கிறது மனம்.
ஜன்னலோர இருக்கை.

காற்றின் திசைக்கேற்ப வளைந்து நிமிரும் நாணலும்,
ஒய்யாரமாய் ஓங்கி நிற்கும் பனைமரங்களும்
பேருந்தின் சாளரத்தில் வாழ்வியல் காட்சியாய் விரிகின்றன.

சாலையோரப் புளியமரங்களின் ஆர்ப்பரிப்பும்,
புதிதாய் முளைவிட்டிருக்கும் காற்றாலையின் மௌனமுமாக
கரைந்தோடுகிறது காலம்.

உருகவும், உறையவும்
மருகவும், மலைக்கவும்
ஒரு நாய்க்குட்டியாய் பழக்கப்பட்ட மனது
ஞாபக நதியில் மெல்ல நீந்தத் துவங்குகிறது.

செந்நிறப் பள்ளத்தாக்கில் தீப்பந்து விழுந்து
எதிர்ப்பக்கப் பால்வெளியில் குளிர்ச்சியாய்
உலாவைத் துவக்குகிறது ஒரு பனிப்பந்து.

நினைவுகளை உருட்டியபடி
சாலையின் திசையில் பயணிக்கிறது வாகனம்.

இதமாகவும், மிதமாகவும்
தாலாட்டிச் செல்லும் குளிர்காற்றில்
நினைவுக்குள் வழிதப்பி அலைதல்
நிஜமாகவே சுகமானது.

அம்மாக்களிடம் எப்போதுமே திட்டுவாங்கும் பெண்குழந்தைகள் முதல்,
அதிகாலைக் குளிரை தேநீரில் கரைக்க முயலும் தாத்தாக்கள் வரை...

எதிரெதிர் காற்றுக்கு அலைக்கழியும் சாலையோரப் பூக்கள் முதல்,
எப்போதும் புன்னகை சிந்தும் எதிர் இருக்கை பூவை வரை...

தொலைதூரப் பயணங்களில யதார்த்தக் கவிதைகள்
எண்ணங்கள் போல் எப்போதும் சிதறிக் கிடக்கின்றன.

உழைப்புக்கும், ஓய்வுக்குமிடையே
பச்சோந்தியாய் பக்குவப்பட்ட மனது,
பிழைப்பிடத்தின் நெருக்கத்தில்
நிறம்மாறித் தூக்கம் தொலைக்கிறது.

வாகனத்துடனான
ஒவ்வொரு உணர்வுப் பிரிதலிலும்
மீண்டும் உயிர்க்கத் துவங்குகிறது
அடுத்த விடுமுறைக்கான ஏக்கம்...!






Friday, 4 November 2011

மழையாடிய பொழுதுகள்

 
நேற்று பெய்த மழையில் 
இன்னமும் நனைந்துகொண்டிருக்கிறது உயிர்.
சொட்டுச்சொட்டாய் உன் நினைவுகள்.
நீ பிரிவறிவித்த மழைநாளின் இரவை -
மூன்று வருடங்களுக்குப் பிறகு 
நினைவுபடுத்தியிருக்கிறது இந்த மழை.

கூடவே...
உன்னோடு கழித்த விடுமுறை நாட்களின் 
மழைநேரப் பின்மதியங்களையும்...
மழை எப்போதும் மழையாகவே இருக்கிறது.

எப்போதாவது ரசிக்கக் கிடைக்கிற 
தாழ்வாரத் தூவானங்களில்
தெறித்தலைகிறது உன் முகம்.
யாருமற்ற பகல்களில் வரும் மழையை நீ ரசிக்கிறாயா?

வாசனைகளோடு வந்து ஜன்னல் நனைக்கிற 
சாரல்களுக்குத் தெரியவில்லை...
நீ இப்போதெல்லாம் அறைக்கு வருவதில்லை என்பதும் -
மழைக்கும் உனக்குமான சினேகம்
மறக்கப்பட்டுவிட்டதையும். 

நனைந்துகொண்டே பேசிவந்த புதன்கிழமை...
ஈரம் காயும்வரை இருந்துவிட்டுப் போன நூல்நிலையம்...
நூல்நிலையத்து விகடனில் வாசித்த மழை கவிதை...
தகரக் கூரையில் விழுந்த துளிச் சப்தங்கள்...
விடைபெறும்வரை பிரியாமலிருந்த இடதுகைகளின் வெப்பம்... 
விடைபெறும் தருணத்தில் நிகழ்ந்த குளிர்விட்ட முத்தம்...

இங்கே எப்போதாவது வருகிற மழையும் 
இவ்வளவையும் கொண்டுவருகிறது...
உன் கடிதங்களைத் தவிர.

- சிசு...


Saturday, 1 October 2011

எரித(ழ)ல் அணை(த்)தல்




என்னைப் பற்ற வைப்பது எளிது.
தீக்குச்சியோ, எரிமலையோ தேவையில்லை.
சின்ன நாணல் கொடியும், கொஞ்சம் கானல் நதியும் போதும்.

இப்போதும் எரிந்துகொண்டுதானிருக்கிறேன்...
விடிந்ததுகூடத் தெரியாமல் திருதிருவென முழிக்கும் தெருவிளக்காக.
ஆலமரங்கள் அடியோடு சரியும் சூறைக்காற்றில்கூட
அணையத் தெரியாத சிற்றகலாக.

பெரியதொரு மழைவந்தால், சின்னஞ்சிறு முக்தி சாத்தியமென்று -
மண்டியிட்டேன்... மன்றாடவும் செய்தேன்.
வலியுணர்ந்து வந்த மழை, பூமியின் மொழி புரியாமல்
வானத்துக்கே திரும்பியபோது
என் உள்ளத்தில் தைத்தன உன் வார்த்தைகள்.

ஒரு மௌனம் வெடித்ததுபோல் துடிக்கப் பழகியது இதயம்.
இடிகளை இனி இப்படியும் இடிக்கலாமென்ற திட்டத்தில் உறைந்தன முகில்கள்.
விண்மீன்களின் கல்லறைகளாகி மீண்டுமொருமுறை
மின்னிமறைந்தன நினைவில் உந்தன் விழிகள்.
கட்டங்கட்டத் தெரியாமல் வட்டமிடும் பறவைபோல்
சுற்றிவரத் துவங்கின உன் பார்வைகள்.

கனவுகளை மென்றுதின்று, கண்ணீர்த்துளிகளை குடித்தும்
அணையத் தெரியவில்லை எனக்கு.
யாரோ வந்து பற்றவைத்தார்கள்... யாரோ வந்து அணைப்பார்கள் ... என்றிருப்பது நிம்மதி.
யார்வந்து பற்றவைக்க வேண்டும்... யார் அணைக்க வேண்டுமென்று
விளக்குகள் எதிர்பார்ப்பது வேதனை.

உன் கரிய கூந்தல் கருப்பு நெருப்பாக எரிவது ஒரு இரவு என்றால் -
எப்படி அணைப்பதென்று எனக்கு நீதான் சொல்லித்தரவேண்டும்...
என்னையும், இரவையும்...!

Saturday, 4 June 2011

அன்புள்ள தோழிக்கு...


அன்புள்ள @#$%&க்கு,

கேள்விக்கணைகளைத் தாங்கிய
அம்பராத்தூளியாய்
உன் கடிதம் கிடைத்தது.

திடீரென்று ஒரு வண்ணத்துப்பூச்சி...
ஓடும் ரயில்பெட்டிக்குள் வந்து,
இடம்தேடித் தவித்து ,
மறுபடியும் வெளியேறி,
காற்றோடு கலந்துவிடுவது போன்ற உணர்வு.

ஜென்மஜென்மமாய் தேடியலைந்த ஒன்றை
நான் பார்த்துவிட்டதாகவோ,
எனக்காகவே படைக்கப்பட்ட ஒன்று
மார்கழியில் மலராக வந்ததாகவோ
நான் உணரவில்லை.

மலர வைத்ததும், நெகிழவைத்ததுமான
வசீகரத் தருணங்களில்
மீண்டும் வாழ்ந்து பார்க்கிறேன்.
ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொன்றையும்
ஒவ்வொன்றாய் கழித்துப் பார்த்தால்
கடைசியில் எஞ்சுவது நீ மட்டும்தான்.

கடலின் அடியாழத்தில் புதைந்த
இசைக்கருவியாய் 
நம்மனதில் கனவாகவே முடிந்துபோகும்
விருப்பங்கள் எத்தனை?

இதோ,
ஜன்னலுக்கு வெளியே
இப்போதுதான் மழை விட்டிருக்கிறது.
தலைதுவட்டாத மரம், செடி, கொடிகளுக்கு மத்தியில்
இதுவரை பார்த்தேயிராத ஒரு அழகான பறவை....

ஏதோ பேசிக்கொண்டே சிறகுலர்த்துகிறது.
ஹே! இங்கே பாரேன்... - என்று அதை,
உன்னிடம் காட்ட நினைக்கிறது மனது.
நீ என்னோடு இல்லை.

அடுத்தவினாடி ஒளித்துவைத்திருக்கும்
ஆச்சர்யங்களால் நிரம்பியது வாழ்க்கை.
பரிமாறாத பூச்செண்டுகளால் என்ன பயன்?

நான் சிறைப்பட்டிருக்கும் கூண்டும் நீ!
நான் சிறகுவிரிக்கும் வானமும் நீ!
உன் புரிதலுக்குள் தவித்துக்கொண்டிருக்கிறது என் விருப்பம்.

பூக்கும் என்று தெரிந்தால்,
குறிஞ்சிக்காக 12  ஆண்டுகள் அல்ல...
ஆயுள்வரைகூடக் காத்திருக்கலாம்.
நீயும் பூப்பாய்...

காதலை ஏற்றுக்கொள்கிற
ஒவ்வொருபெண்ணும்
தேவதை ஆகிறாளாம்.
நீ தேவதை ஆகப்போகிறாயா? எப்போது?

என் ஐந்து விரல்களும் காத்திருக்கின்றன.
உன் ஐந்து விரல்கள் எப்போது........?

ஆவலுடன் காத்திருக்கிறேன்...,
யரல வழள.



Thursday, 26 May 2011

அழகின் கலைவிழா


வாசல் முற்றத்தில் வசந்தத்தை வரவேற்கும்
வேப்பம்பூக்களின் மென்மழை.
வீட்டுமாடியில் ஏறிநின்றாலும் தலைகுனிந்து
கேலிபேசும் தென்னங்கீற்றுகள்.

வெள்ளை உள்ளமாய் வெடித்துச் சிரிக்கும் பருத்திச்செடி.
மண்ணின் மேனிக்கு வலிஎடுக்காமல் முளைகீறும் விதைகள்.
மின்னல் மழைக்கால ஈரநிலத்துக் காளான்.
அந்தி சாயும் நேரத்துச் சின்ன சாரல்.

ஆகாச விளிம்பில் சிவப்பு வடிசலோடு தலையெடுக்கும் கதிரவன்.
தூங்குமூஞ்சி மரங்களில் சூரியன் விழித்திருக்கும் இளம்பகல்.
காதல் வரிகள் கிறுக்கி வைத்த கள்ளிச்செடியின் பச்சைத் தாள்கள்.   
மயக்கும் மலர்ச்சுமையுடன் கற்றாழைத் தண்டுகள்.

கூடடையும் குருவிகளின் சரிகமபதநி.
கொதிக்கும் உலையரிசியின் தாளகதி. 
என்னைக் கடக்கிற நரை மேகங்கள்.
கெட்டிக்கரை போட்ட தறிச்சேலை போல்,
நீண்டுகிடக்கும் தார்ச்சாலை.

புயலுக்குப் பின்னும் பூப்பதை நிறுத்தாதபன்னீர்ப்பூ மரங்கள்.
கற்றைக் காலடிகள் தழுவியதால்,
ஒற்றைப்பாதையான பச்சை மெய்யெழுத்துகள்.
பள்ளங்களில் புரண்டெழுந்து பந்தாடிய பனங்கொட்டைகள்.
தொலைதூரப் பயணமெங்கும் சிதறிக் கிடக்கும் கவிதைகள்.

வெள்ளரிப் பிஞ்சுகளைக் கடித்தபடி,
ஆலம் விழுதுகளில் ஊஞ்சலாடும் சிறுவர்கள்.
கணுக்கால் கொலுசு கீதமிட, கண்ணாடிவளை பேச, 
சிற்றோடையில் மஞ்சள் குளித்து, 
ஈரச்சேலையுடன்தெம்மாங்கு நடைநடந்து 
தெருக்களைக் கவிதைக்களமாக்கும் கன்னிப்பெண்கள்.

கண்டவுடன் கன்னம் தடவி -
திருஷ்டி கழிக்கும் தண்டட்டிப் பாட்டிகள்.
ஒரு அழகின் கலைவிழாவாய் எங்கள் கிராமம்.

வாய்க்காலில் கால்களைக் கழுவியபடி,
பூவரச வரப்புகளில் தேடுகிறேன்...
நேற்றைத் தொலைத்த ஞாபக நாளங்களை. 

வாழும்கலை மறந்து புலம்பெயர்ந்ததற்கான 
வலுவான காரணம் -
இப்போதும் இல்லை என்னிடம்.

Wednesday, 4 May 2011

நாளைய ஆகாயம் நமக்காக...



குறைகிற நிலா மறுபடி வளரும்.
மறைகிற சூரியன் மறுநாள் உதிக்கும்.
விழுகிற விதை செடியாய் முளைக்கும்.
அழுகிற மழை புல்லாய் சிரிக்கும்.

உடைகிற மலை சிலையென ஆகும்.
சிதைகிற அணு சக்தியை வீசும்.
ஒடிகிற மூங்கில் குழலாய் மாறும்.
முடிகிற நாள் மறுபடி விடியும்.

தடைகள் எல்லாம் முடிவுகள் அல்ல.
இடர்கள் எல்லாம் இறுதிகள் அல்ல.
வழியில் வருகிற பள்ளம் தாண்டு.
விழியில் வழிகிற கண்ணீர் தாங்கு.

தொடரும் கனவுகளை துரத்திப்பிடி.
வசப்படும் பொழுதுகளை வசீகரப்படுத்து.
வளரும் நினைவுகளை வரிசைப்படுத்து.

நம்பிக்கை வீணையை நாள்தோறும் வாசி.
நேற்றை மற; இன்றை நினை.
நாளைய ஆகாயம் நமக்காக விரியும்.




Saturday, 30 April 2011

அரையாடைக் கிழவன்


காந்தியே...

நீ பிறந்ததென்னவோ -
போர்பந்தரில் தான்.
ஆனால் போர் இல்லாமலேயே,
எங்களை ஜெயிக்க வைத்தாய்.

நீ எங்களுக்கு -
சுதந்திரச் சுடராய் ஒளி தந்துவிட்டு
கருகிப்போன திரி.

நீயொரு ஈசல்.
எங்கள் உள்ளத்தில் 
ஆகஸ்டு 15 -ல் பிறப்பாய்;
அன்றே இறப்பாய்.

எங்களுக்காக நீ கொடுத்ததையெல்லாம்
பயன்படுத்தாமலே பழசாக்கினோம் -
வாய்மை... நேர்மை... தூய்மை...
அஹிம்சை... சுதேசி... ராட்டை...
ஒத்துழையாமை... சத்யாகிரகம்... மதுவிலக்கு...

கூன்விழுந்த உன் முதுகில்
நாங்கள் நெஞ்சம் நிமிர்த்தினோம்.
சகிப்பை மறந்து உருவிய வாளில்
வடிந்த குருதியை;
உன் கந்தலாடையில் உலர்த்தினோம்.

உன் தேகத்தின் மீதுதான்
துண்டாடப்பட வேண்டுமென்றாய்!
துண்டாடியபின் உன் தேகத்தில்
குண்டாடிய தேசமிது!

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேரிலும்
தேர்ந்தெடுத்தவர்கள் தெருவிலும் நிற்கும்
இந்த தேசத்தையா நீ நேசித்தாய்?

இங்கே -
உனக்குப் பிறகு சுடப்பட்டது
"உண்மை" தான்!

ஜனநாயகத்தை சமாதியாக்கிவிட்டு
அந்தக் குழிகளுக்கு மேல் கும்மாளமிடுகிற
இந்த அரசியல் கழுகுகளிடமிருந்து -
மீண்டும் இந்தியாவை மீட்பதற்கு...

உன் கைத்தடியோடு எழுந்துவா காந்தியே...
காத்திருக்கிறோம்.!



.

Monday, 25 April 2011

அன்புள்ள தோழனுக்கு...

அன்புள்ள தோழனுக்கு...

நினைவிருக்கிறதா? நம் அறிமுகம்.
எனக்கில்லை.
ஒரேமழையில் உயிர்த்தெழுந்த காளான்போல்
ஒரே சந்திப்பில் பூக்கவில்லை நம் நட்பு.

அலுவலகத்தின் முதல்நாள்.
எல்லோரையும்போல்தான்
அறிமுகமானாய் நீ...!
பணியில் தடுமாறிய என்னை
பக்குவமாய் திருத்தி்ய போதெல்லாம்
நீயொரு நல்ல சகஊழியனாய் மதிக்கப்பட்டாய்.
சரி. எப்போது நண்பனானாய்?
எனக்கு நினைவில்லை.

என் அண்ணனின் திருமணம்.
வந்திருந்த அத்தனை சகஊழியர்களும்
என் அன்னையை ஆன்ட்டி-யாக்கினர்.
நீ மட்டும் அம்மாவாக்கிய போது
நமக்குள் புரிதல் துவங்கியது.

எந்த நீரூற்றி வளர்த்தோமென்று தெரியவில்லை
நட்பு மட்டும் செழித்து வளர்ந்தது.

அரசியல் முதல் ஆன்மிகம் வரை...
இலக்கணம் முதல் இலக்கியம் வரை...
இணையம் முதல் இதயம் வரை...
இமயம் முதல் இ-மயம் வரை...
சங்ககாலம் முதல் சமச்சீர் கல்வி வரை...
செல்போன் முதல் ஸ்பெக்ட்ரம் வரை...
சமையல் முதல் கோலம் வரை...
வள்ளுவர் கோட்டம் முதல் தமிழ்த்தோட்டம் வரை...

எதைப்பற்றி நாம் பேசிக்கொள்ளவில்லை?

என்வீட்டிற்கு வரத்துவங்கினாய்.
முதல் வருகையின் மதிய உணவுக்குப் பின்னான
உன் புறப்படுதலுக்கு முன்,
என் அம்மாவைப் பார்த்து சொன்னாய்.
"நட்புக்காலத்தின் 15 -ம் கவிதை
உங்களுக்கானதென்று".
படித்துவிட்டு சிரித்த அம்மாவின் புன்னகையில்
இன்னும் விசாலமானது நம் நட்பு.

நட்புக்காலம்...
- அறிவுமதியின் புனைவு அல்ல
நம்மின் பதிவென்று
சிலாகித்துக் கொண்டோமே...
நினைவிருக்கிறதா?

வாழ்வின் அடுத்தடுத்த உயரங்களுக்காக
நீ இடம்பெயர்ந்தபோது
என் உதட்டுப் புன்னகை கூட உப்புக்கரித்தது.

அலைபேசியின் ஆதரவில்
நம் தூர எல்லைகள்
அட்சமாகவும், தீர்க்கமாகவும் குறுக்கப்பட்டன.
தொடர்ந்து என் குடும்பத்தோடும் தொடர்பிலிருந்தாய்.
மனத்தந்தியில் நம் எண்ணங்கள்
நித்தமும் பிரசவித்தன.

சிலமாதங்கள் இடைவெளிக்குப் பின்
வேர்வைபூக்கும் ஒரு கோடை சந்திப்பில்,
கடந்தகாலத்தின் பசுமையான பக்கங்களைப்
புரட்டிக்கொண்டே - என்வீட்டில்
நாம் அளவளாவிக் கொண்டிருந்தோம்.

பேச்சினூடே...
நான் உன்னிடமிருந்து சற்றும் எதிர்பாராத
அந்த வார்த்தைகளை வெளிப்படுத்தினாய்.
திகைப்பாய் உணர்ந்தேன் நான்.
இலேசான மனதோடு புன்னகைத்துப் புறப்பட்டாய் நீ.

உதைவண்டியில் ஒன்றாய் பயணித்தபோதும்,
அலைநீரடித்து கடற்கரையில் விளையாடியபோதும்
நாம் உணர்ந்ததில்லையே...
நட்பு தவிர்த்த உணர்வுகள்!

நம் தூரஇடைவெளிகளிலும், கால எல்லைகளிலும் உணர்ந்தாயா?
உலாபேசியின் உரையாடல்களில் உணர்ந்தாயா?
உறவின் வெற்றிடங்களை நிரப்ப
அன்பாகவும், ஆறுதலாகவும்
ஒரு நட்பு போதுமென்று நீயேன் உணரவில்லை??

நட்பைத் தவிர்த்து வேறொன்றும்
உணர்ந்ததில்லை உன்னிடம் நான்.
என்றென்றும் உன் நட்பு போதுமெனக்கு...

என்றாலும்,
இருவேறு உணர்வுக்குவியலாய் நாம்.
நட்பின் பாதையில் இனி நமக்கு -
முட்கள் மட்டுமே அதிகதிகமாய்த் தென்படும்.

மிக அழ்ந்த யோசனைக்குப் பின்னும்,
உன்னில் உணர்ந்த சுதந்திரத்தை
இனி யாரில் பெறுவோம் என்ற கவலையையும் மீறி -
நட்புக்காலத்தின் 15 -ம் கவிதையை
மெய்யாக்கவே முனைகிறேன் நான்.

நம் நட்பின்
கடைசிப் பகிர்தலாய் இருக்கட்டும் இந்தக்கடிதம்.
ஏனென்றால்...

நட்புசொல்லி நெருங்கிப் பழகி
ஒருவரையொருவர் புரிந்துகொண்டாலும்...
காதலைக் குறிவைத்தே
முன்னகர்த்தப்படும் நட்பும்
நம்பிக்கைத் துரோகமே...!

என்றென்றும் உன் நலமே விழைகிறேன்.
எப்போதும் உன் தோழியாய்...
பசுமையான நினைவுகளுடன்,
@
#
$
%
&...

Saturday, 23 April 2011

மெய்ஞானத்திற்கும் மேலே...




கோபுரதரிசனம்...
மெய்ஞானத்திற்கும் மேலே விஞ்ஞானம்.
கலசத்திற்கு காவலாய் இடிதாங்கி. 



.

Saturday, 9 April 2011

வறுமைப்பூக்கள்



உலகம் பூபாளமாய்
விடியும்போது
வறுமைப்பூக்கள் மட்டும்
முகாரி பாடுகின்றன.

அன்புச்சட்டம் முதல்
அதிகாரச்சட்டம் வரை
அமல்படுத்துவதெல்லாம்
ஆதிக்கவர்க்கமாகிப் போனதில்
உரிமை கேட்டுப் போன வறுமைப்பூக்கள்
ஊமையாகிப் போயின.


தொழிற்சாலை நகரங்களில் - இன்னும்
இதழ்களில் பால்மணம் மாறா குழந்தைகள்
போராடுகின்றன இயந்திரங்களோடு.
அவர்களின் கண்ணீர்த்துளியில்
காணாமல் போனது இளமை மட்டுமா...??

இந்தியப் பொருளாதாரத்தால் புறக்கணிக்கப்பட்ட,
வறுமைப்பேயால் வாழ்விழந்த,
சில விலைமலிந்த ரோஜாக்கள்
ராஜாக்களிடம் புன்னகை பூக்கின்றன...
குடல் பசியைத் தணிக்க,
உடல்பசியின் துணையோடு.

அப்புறமென்ன...
வேளைக்கொரு வண்டு வந்து
விருந்து கேட்டாலும்
விருப்பத்தோடு @#$&^...

பணக்காரன் பஞ்சணையில்
பாவையோடு கொஞ்சும்போது
பாட்டாளி மட்டும்
வறுமை எனும் கொலைவாளின்கீழ்
குடித்தனம் நடத்துவதா?

வாய்பேசாத கற்சிலைகளுக்கு
தங்கக்கூரை வேய்ந்த இந்த மாநிலம் -
வரங்கேட்கும் வறுமைப்பூக்களுக்கு
வாழ்வளித்திருக்கிறதா?

ஏடா பாரதி!
என்னடா சொன்னாய்? -
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழிப்போம் என்றா??

அப்படியெனில் -
எத்தனைமுறை அழித்திருக்க வேண்டும்
இத்தேசத்தை...
அல்ல -
நம் தேசியத்தை !!!


.