Saturday 30 April, 2011

அரையாடைக் கிழவன்


காந்தியே...

நீ பிறந்ததென்னவோ -
போர்பந்தரில் தான்.
ஆனால் போர் இல்லாமலேயே,
எங்களை ஜெயிக்க வைத்தாய்.

நீ எங்களுக்கு -
சுதந்திரச் சுடராய் ஒளி தந்துவிட்டு
கருகிப்போன திரி.

நீயொரு ஈசல்.
எங்கள் உள்ளத்தில் 
ஆகஸ்டு 15 -ல் பிறப்பாய்;
அன்றே இறப்பாய்.

எங்களுக்காக நீ கொடுத்ததையெல்லாம்
பயன்படுத்தாமலே பழசாக்கினோம் -
வாய்மை... நேர்மை... தூய்மை...
அஹிம்சை... சுதேசி... ராட்டை...
ஒத்துழையாமை... சத்யாகிரகம்... மதுவிலக்கு...

கூன்விழுந்த உன் முதுகில்
நாங்கள் நெஞ்சம் நிமிர்த்தினோம்.
சகிப்பை மறந்து உருவிய வாளில்
வடிந்த குருதியை;
உன் கந்தலாடையில் உலர்த்தினோம்.

உன் தேகத்தின் மீதுதான்
துண்டாடப்பட வேண்டுமென்றாய்!
துண்டாடியபின் உன் தேகத்தில்
குண்டாடிய தேசமிது!

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேரிலும்
தேர்ந்தெடுத்தவர்கள் தெருவிலும் நிற்கும்
இந்த தேசத்தையா நீ நேசித்தாய்?

இங்கே -
உனக்குப் பிறகு சுடப்பட்டது
"உண்மை" தான்!

ஜனநாயகத்தை சமாதியாக்கிவிட்டு
அந்தக் குழிகளுக்கு மேல் கும்மாளமிடுகிற
இந்த அரசியல் கழுகுகளிடமிருந்து -
மீண்டும் இந்தியாவை மீட்பதற்கு...

உன் கைத்தடியோடு எழுந்துவா காந்தியே...
காத்திருக்கிறோம்.!



.

Monday 25 April, 2011

அன்புள்ள தோழனுக்கு...

அன்புள்ள தோழனுக்கு...

நினைவிருக்கிறதா? நம் அறிமுகம்.
எனக்கில்லை.
ஒரேமழையில் உயிர்த்தெழுந்த காளான்போல்
ஒரே சந்திப்பில் பூக்கவில்லை நம் நட்பு.

அலுவலகத்தின் முதல்நாள்.
எல்லோரையும்போல்தான்
அறிமுகமானாய் நீ...!
பணியில் தடுமாறிய என்னை
பக்குவமாய் திருத்தி்ய போதெல்லாம்
நீயொரு நல்ல சகஊழியனாய் மதிக்கப்பட்டாய்.
சரி. எப்போது நண்பனானாய்?
எனக்கு நினைவில்லை.

என் அண்ணனின் திருமணம்.
வந்திருந்த அத்தனை சகஊழியர்களும்
என் அன்னையை ஆன்ட்டி-யாக்கினர்.
நீ மட்டும் அம்மாவாக்கிய போது
நமக்குள் புரிதல் துவங்கியது.

எந்த நீரூற்றி வளர்த்தோமென்று தெரியவில்லை
நட்பு மட்டும் செழித்து வளர்ந்தது.

அரசியல் முதல் ஆன்மிகம் வரை...
இலக்கணம் முதல் இலக்கியம் வரை...
இணையம் முதல் இதயம் வரை...
இமயம் முதல் இ-மயம் வரை...
சங்ககாலம் முதல் சமச்சீர் கல்வி வரை...
செல்போன் முதல் ஸ்பெக்ட்ரம் வரை...
சமையல் முதல் கோலம் வரை...
வள்ளுவர் கோட்டம் முதல் தமிழ்த்தோட்டம் வரை...

எதைப்பற்றி நாம் பேசிக்கொள்ளவில்லை?

என்வீட்டிற்கு வரத்துவங்கினாய்.
முதல் வருகையின் மதிய உணவுக்குப் பின்னான
உன் புறப்படுதலுக்கு முன்,
என் அம்மாவைப் பார்த்து சொன்னாய்.
"நட்புக்காலத்தின் 15 -ம் கவிதை
உங்களுக்கானதென்று".
படித்துவிட்டு சிரித்த அம்மாவின் புன்னகையில்
இன்னும் விசாலமானது நம் நட்பு.

நட்புக்காலம்...
- அறிவுமதியின் புனைவு அல்ல
நம்மின் பதிவென்று
சிலாகித்துக் கொண்டோமே...
நினைவிருக்கிறதா?

வாழ்வின் அடுத்தடுத்த உயரங்களுக்காக
நீ இடம்பெயர்ந்தபோது
என் உதட்டுப் புன்னகை கூட உப்புக்கரித்தது.

அலைபேசியின் ஆதரவில்
நம் தூர எல்லைகள்
அட்சமாகவும், தீர்க்கமாகவும் குறுக்கப்பட்டன.
தொடர்ந்து என் குடும்பத்தோடும் தொடர்பிலிருந்தாய்.
மனத்தந்தியில் நம் எண்ணங்கள்
நித்தமும் பிரசவித்தன.

சிலமாதங்கள் இடைவெளிக்குப் பின்
வேர்வைபூக்கும் ஒரு கோடை சந்திப்பில்,
கடந்தகாலத்தின் பசுமையான பக்கங்களைப்
புரட்டிக்கொண்டே - என்வீட்டில்
நாம் அளவளாவிக் கொண்டிருந்தோம்.

பேச்சினூடே...
நான் உன்னிடமிருந்து சற்றும் எதிர்பாராத
அந்த வார்த்தைகளை வெளிப்படுத்தினாய்.
திகைப்பாய் உணர்ந்தேன் நான்.
இலேசான மனதோடு புன்னகைத்துப் புறப்பட்டாய் நீ.

உதைவண்டியில் ஒன்றாய் பயணித்தபோதும்,
அலைநீரடித்து கடற்கரையில் விளையாடியபோதும்
நாம் உணர்ந்ததில்லையே...
நட்பு தவிர்த்த உணர்வுகள்!

நம் தூரஇடைவெளிகளிலும், கால எல்லைகளிலும் உணர்ந்தாயா?
உலாபேசியின் உரையாடல்களில் உணர்ந்தாயா?
உறவின் வெற்றிடங்களை நிரப்ப
அன்பாகவும், ஆறுதலாகவும்
ஒரு நட்பு போதுமென்று நீயேன் உணரவில்லை??

நட்பைத் தவிர்த்து வேறொன்றும்
உணர்ந்ததில்லை உன்னிடம் நான்.
என்றென்றும் உன் நட்பு போதுமெனக்கு...

என்றாலும்,
இருவேறு உணர்வுக்குவியலாய் நாம்.
நட்பின் பாதையில் இனி நமக்கு -
முட்கள் மட்டுமே அதிகதிகமாய்த் தென்படும்.

மிக அழ்ந்த யோசனைக்குப் பின்னும்,
உன்னில் உணர்ந்த சுதந்திரத்தை
இனி யாரில் பெறுவோம் என்ற கவலையையும் மீறி -
நட்புக்காலத்தின் 15 -ம் கவிதையை
மெய்யாக்கவே முனைகிறேன் நான்.

நம் நட்பின்
கடைசிப் பகிர்தலாய் இருக்கட்டும் இந்தக்கடிதம்.
ஏனென்றால்...

நட்புசொல்லி நெருங்கிப் பழகி
ஒருவரையொருவர் புரிந்துகொண்டாலும்...
காதலைக் குறிவைத்தே
முன்னகர்த்தப்படும் நட்பும்
நம்பிக்கைத் துரோகமே...!

என்றென்றும் உன் நலமே விழைகிறேன்.
எப்போதும் உன் தோழியாய்...
பசுமையான நினைவுகளுடன்,
@
#
$
%
&...

Saturday 23 April, 2011

மெய்ஞானத்திற்கும் மேலே...




கோபுரதரிசனம்...
மெய்ஞானத்திற்கும் மேலே விஞ்ஞானம்.
கலசத்திற்கு காவலாய் இடிதாங்கி. 



.

Saturday 9 April, 2011

வறுமைப்பூக்கள்



உலகம் பூபாளமாய்
விடியும்போது
வறுமைப்பூக்கள் மட்டும்
முகாரி பாடுகின்றன.

அன்புச்சட்டம் முதல்
அதிகாரச்சட்டம் வரை
அமல்படுத்துவதெல்லாம்
ஆதிக்கவர்க்கமாகிப் போனதில்
உரிமை கேட்டுப் போன வறுமைப்பூக்கள்
ஊமையாகிப் போயின.


தொழிற்சாலை நகரங்களில் - இன்னும்
இதழ்களில் பால்மணம் மாறா குழந்தைகள்
போராடுகின்றன இயந்திரங்களோடு.
அவர்களின் கண்ணீர்த்துளியில்
காணாமல் போனது இளமை மட்டுமா...??

இந்தியப் பொருளாதாரத்தால் புறக்கணிக்கப்பட்ட,
வறுமைப்பேயால் வாழ்விழந்த,
சில விலைமலிந்த ரோஜாக்கள்
ராஜாக்களிடம் புன்னகை பூக்கின்றன...
குடல் பசியைத் தணிக்க,
உடல்பசியின் துணையோடு.

அப்புறமென்ன...
வேளைக்கொரு வண்டு வந்து
விருந்து கேட்டாலும்
விருப்பத்தோடு @#$&^...

பணக்காரன் பஞ்சணையில்
பாவையோடு கொஞ்சும்போது
பாட்டாளி மட்டும்
வறுமை எனும் கொலைவாளின்கீழ்
குடித்தனம் நடத்துவதா?

வாய்பேசாத கற்சிலைகளுக்கு
தங்கக்கூரை வேய்ந்த இந்த மாநிலம் -
வரங்கேட்கும் வறுமைப்பூக்களுக்கு
வாழ்வளித்திருக்கிறதா?

ஏடா பாரதி!
என்னடா சொன்னாய்? -
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழிப்போம் என்றா??

அப்படியெனில் -
எத்தனைமுறை அழித்திருக்க வேண்டும்
இத்தேசத்தை...
அல்ல -
நம் தேசியத்தை !!!


.