Thursday 31 March, 2011

கடல் - காதல் - நான்



நுரைதளும்பும் அலைகடலோரம்
காற்றுவாங்கப் போனேன்.
காலாற நடக்கையில்
கண்ணில் தென்பட்டனர் காதலர் பலர்.

காதலனைப் பார்த்தும் -
காதலியைப் பார்த்தும் -
காறித்துப்பியது கடல்!

அலைபூக்கள் வீசி ஆசீர்வதிப்பாயே...
நீயா -
எச்சில் துப்பி இழிவு செய்கிறாய்?
ஆதங்கத்தோடு கேட்டேன் ஆழியிடம்.

கனன்ற கதிரவனை
கனலாய் எதிரொளித்துக் கொண்டே
பேரிரைச்சலாய் -
மறுமொழி பகன்றது அலைமடி!

இவன் -
ஒவ்வொரு வாரமும்
ஒவ்வொரு காதலியோடு,
நான்கைந்து வாரமாய்
நான்கைந்து காதலியோடு வந்தான்!

இவள் -
ஒவ்வொரு காதலனோடு
நான்கைந்து நாளாய் வருகிறாள்!

இடிந்துபோனேன் நான்!
அலைகடலே...
நுரை தாயே...
உன்னிடம் ஒரு கோரிக்கை!

கொஞ்சம் இங்கே வா!
எனக்காக -
இன்னுமொருமுறை
அந்த நாய்கள் மீது எச்சில் துப்பு!

Saturday 26 March, 2011

நொடிகளும் நிமிடங்களும்



பறவையின் இறகில்
பாலொளியை நனைத்து
மேனியெங்கும் தொட்டுத்தடவிய
சலனத்தை உணரும்
பருவத்தின் பெளர்ணமிகளில்...
தூக்கத்தைத் தொலைத்து
திடுக்கிட்டு விழித்திருக்கிறேன்.

உண்மை உறைத்து,
புன்னகையோடு நிலவை நோக்குகையில்
அங்கே -
பூக்களின் முகவரியோடு
சில முகங்களைக் கண்டிருக்கிறேன்.
ஒருமுறையல்ல... இருமுறையல்ல...
ஒவ்வொருமுறையும்
முழுநிலா நாளில் -
இது தொடர்ந்துகொண்டு தானிருந்தது.

கடிவாளமிடமுடியாக் காலக்குதிரையின்
குளம்படிச்சத்தம்
இப்போதும் காதில் இரைச்சலாய்...

வாரங்களும், வருடங்களுமாய்க் கரைந்த
வாழ்க்கையின் பயணத்தில்
என்னுடன் நீ வந்தபின்னரும்-
சில பின்னிரவுகளில்
பறவையிறகின் சீண்டலை உணர்ந்திருக்கிறேன்.

அப்போதும் தூக்கம் தொலைத்து
என்தேடல் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது,
இம்முறை உன்முகத்தை பௌர்ணமியில் தேடி...!

நிலவே பொறுமையிழந்த
ஒரு பின்னொருநாள் பின்னிரவில்
என் காதோரம் வந்து
கிசுகிசுத்துவிட்டுப் போனது அது.
என்னில் அவள்முகம் தேடாதே.
நான் முகம் பார்ப்பதே அவளில்தானென்று.

திடுக்கிட்டுத் திரும்பினேன்.
அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த
உன் நுதலில் ஒளிர்ந்தது மூன்றாம்பிறை.

இரைச்சல் இன்னிசையானது
அப்போதிருந்துதான்...!
இனி வாழ்க்கைப்பயணம்
நொடிகளும், நிமிடங்களுமாய்க் கரையும்.

Saturday 19 March, 2011

இந்தியாவில் புரட்சிக்கான வாய்ப்பு...

இது ஒரு கலைஞர் டைப் பதிவு. அதாவது கேள்வியும் நானே... பதிலும் நானே...


கேள்வி:
சமீபகாலமாக ஆப்பிரிக்க மற்றும் அரேபிய நாடுகள் சிலவற்றில் தொடர்ச்சியாக அரசின் அடக்குமுறைக்கும், தவறான அணுகுமுறைக்கும் எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடிவருவதை அறிந்திருப்பீர்கள். சில நாடுகளில் ஆண்டாண்டுகாலமாக பதவியில் இருந்த அதிபர்கள் தூக்கி எறியப்பட்டிருப்பதையும் அறிவீர்கள்.

சாமானிய மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளும், அவர்களின் ஜீவாதார உரிமை மறுப்புகளும் இந்தியாவிலும் நடக்கிறது. வறுமை, வேலைவாய்ப்பின்மை, பட்டினிச்சாவுகள் இங்கும் நடக்கிறது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அலட்சியமும், நிலையான பொருளாதார வளர்ச்சியில் மெத்தனமும் காட்டும் அரசியல்வாதிகள் இங்கும் இன்னும் அராஜகமாக அதிகாரத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். வாரிசு அரசியல் விருட்சமாக வளர்ந்துகொண்டு இருக்கிறது.

ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு, இங்கும் மக்கள் திறமையற்ற தலைமைக்கு எதிராக அணிதிரள்வார்களா? புரட்சியோ, கிளர்ச்சியோ இந்தியாவில் வாய்ப்பிருக்கிறதா? குறைந்தபட்சம் அதற்கான பொறி இந்தியாவில் இருக்கிறதா? மிகமுக்கியமாக, இந்தியாவில் இப்படியொரு புரட்சிக்கு தேவை இருக்கிறதா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


பதில்:
புரட்சி என்ற சொல்லுக்கான அர்த்தம் கூட இங்கு யாருக்கும் சரிவரத் தெரியாது. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுபவை மூன்று புரட்சிகள். பிரெஞ்சுப்புரட்சி பள்ளியில் பத்து மதிப்பெண் வாங்குவதற்கு பயன்பட்டதோடு சரி. ரஷ்யப்புரட்சியின் கதாநாயகர்களைப் பற்றி கல்லூரியில் கண்கள் விரியக் கதைத்ததோடு மறந்து போனது. க்யூபப் புரட்சியைப் பற்றி கேட்டால் எத்தனை பேருக்குத் தெரியும்??

பக்கத்தில் நடந்த ஈழம் பற்றிப் பேசினால் இனம் பற்றிப் பேசுகிறான் என்பார்கள். சரி விடுவோம். இந்த ஆப்பிரிக்க, அரேபிய கிளர்ச்சிகள் குறித்தாவது தெரியுமா? லிபியக் கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவத் தாக்குதல் நடந்த போது, அதை ரசித்து, ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து சிலாகித்தவர்கள் நம்மில் எத்தனையோ பேர்...!! "ஏரோபிளேன் சும்மா சொய்ங்க்னு வந்து டமால்னு குண்டு போட்டாம் பாரு. செமத்தியா இருந்துச்சி" என்று கண்கள் விரியக் கதைத்தவர்கள் நம்மில் இல்லையா?

மரபுசார்ந்த விவசாயத்தையும், இயற்கை விஞ்ஞானத்தையும் வசதியாக மறந்துவிட்டு, செறிவூட்டப்பட்ட விதையையும், ரசாயன உரங்களையும் பயன்படுத்தி குண்டுகுண்டாய் தக்காளியை விளைவிப்பதுதான் பசுமைப் புரட்சி என்று எண்ணும் மக்கள் வாழும் நாட்டில், ஜனநாயகப் புரட்சி எங்கிருந்து வரப்போகிறது?

ஆனால் மிகமுக்கியமாக இந்தியாவில்தான் புரட்சியின் தேவை அதிகமாக இருக்கிறது. வாரிசு அரசியலையும், பல்லாயிரக்கணக்கான மன்னிக்கவும்... லட்சக்கணக்கான கோடிரூபாய்கள் ஊழலையும் ஜனநாயக வழியில் ஒழிப்பதென்பது நிச்சயம் இனிநிறைவேறாது. அந்த நம்பிக்கைகள் எப்போதோ தகர்ந்துவிட்டன. அதற்காக ஆயுதமேந்திய புரட்சி வேண்டுமென்று நான் கொடி பிடிக்கவில்லை. மக்கள் புரட்சி ஒன்றுதான் திறவுகோல். இந்தியாவின் நூற்றுமுப்பத்து சொச்சம் கோடி மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு சக்தி நிச்சயமாக தேவை.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தற்போதுள்ள சூழ்நிலையில் புரட்சிக்கான விதையோ, பொறியோ இந்தியாவில் இல்லை. மாவோயிஸ்டுகளையும், நக்சலைட்டுகளையும் தீவிரவாதிகளாகப் பார்க்கும் மனோபாவம் எப்போது மாறுகிறதோ அப்போதுதான் இந்த விதை/பொறி இந்தியாவில் தோன்றும். அது மரமாகவோ/கனலாகவோ மாற சிலகாலம் காத்திருக்கவேண்டும்.

அதுவரையில்....
பெரியாரின் வார்த்தைகளில் சொல்வதென்றால்...
புரட்சியாவது... வெங்காயமாவது...!?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குறிப்பு: இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.சிலருக்கு மாற்றுக்கருத்துகள் இருக்கக்கூடும். இருந்தால் வரவேற்கிறேன்.

Wednesday 9 March, 2011

நீ என்ன வேண்டும் எனக்கு?


நீ என்ன வேண்டும் எனக்கு?
உன்னைப் பார்த்தாலே மனசுக்குள் ஏதோ துளிர்க்கிறது.
பார்க்காதபோதோ பார்க்கவேண்டும் போல் ஆகிறது.
நாம் பேச நேரிட்டாலோ - பேசிப் பிரிந்த பின்பும்...
என்ன பேசினோம் என யோசித்து யோசித்தே காலம் கரைகிறது.

நீ என்னதான் வேண்டும் எனக்கு?
நமக்குள் என்ன இருக்கிறது?

நட்பா...?
"ஒண்ணு கேட்டா கோச்சுக்கக் கூடாது"
இப்படியாகத் தொடங்கும் நம் பெரும்பான்மையான உரையாடல்களில்
உன் நாசியைப் போலவே -
தலைகீழாய் தொங்கும் வினாக்குறியாய் தவிக்கிறது நட்பு.

காதலா...?
நாமிருவரும் எதிர்பாலர்கள் என்ற
ஒரு காரணம் மட்டுமே தீர்மானிக்க முடியாத
பிறழ்ந்த அலைவரிசையாய்
உன் நெற்றிச் சுருக்கங்களில் சடுகுடு ஆடுகிறது காதல்.

ம்ம்.
இது நட்பல்ல...
இது காதலுமல்ல...

சரி.
நம்மிடையே இருக்கிறதே ஏதோ ஒன்று.
குழந்தை போல் சிரித்துக் கொண்டு.
அதற்கு என்ன பெயர்?

அட விட்டுத்தள்ளு...
ரோஜாவுக்கு பெயரா முக்கியம்?

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Monday 7 March, 2011

யாருக்குத் தெரியும்...??


தமிழில்
எழுத்துக்களை குறையுங்கள் என்று
யார்யாரோ சொல்கிறார்களாம்...
எனக்கும் போதுமடி.
ஐந்தே எழுத்துகள்!

குரலுக்காகவே குயிலை நேசித்தவன் -
நேற்றுமுதல் நிறத்திற்காகவும்...!

என் இதயத்தை
நான் இரும்பாய்த்தான் வைத்திருந்தேன்.
யாருக்குத் தெரியும்...
நீ காந்தமாய் வந்து தொலைப்பாய் என்று...!!!

Saturday 5 March, 2011

திருமண அழைப்பிதழ்


திருமண அழைப்பிதழ்.
மணமகள் இடம் - உன் பெயர்.
மணமகன் இடம் - வெற்றிடம்.
பிடித்தவன் பெயரை இட்டுக்கொள்ளென
உரைக்கும் சித்தம் -
உன் தந்தையிடமிருக்கிறது!

அப்படியே என் வீட்டிலும்...!
இங்கு -
மணமகள் இடம் - வெற்றிடம்.

இருவரிடத்திலுமே...
பெற்றவர்கள் எண்ணியதை
முடிக்கும் பித்தம் முற்றியிருக்கிறது!

ஆனாலும்...

நாமிருவரும்...
நம்மிருவர் பெயரை இட்டால்மட்டும்
இன்னுமொரு யுத்தம் மிச்சமிருக்கிறது!

உன் இதழ்களை நேசிக்கிறேன்...



இவ்வுலகில் இருக்கும்
அத்தனை ஆயுதங்களைவிடவும்
உன் வாயிலிருந்து வரும் சில வார்த்தைகள்
என்னை அதிகம் காயப்படுத்த முடியும்.


ஆனாலும்,
உன் இதழ்களை நேசிக்கிறேன்.
அவை சிந்தும் ஒரு புன்னகையால் மட்டுமே
என் காயங்களைக் குணப்படுத்தவும் முடியும்.



இலக்கணம் கற்காத ஆசைகள்


குடையற்ற ஒரு பொழுதில்
உன்னோடு நனைய வேண்டும்.
மழையற்ற ஒரு பொழுதில்
உனக்கு குடைபிடிக்க வேண்டும்.

இலக்கணம் கற்காமல்
தலைகாட்டுகின்றன ஆசைகள்.

Thursday 3 March, 2011

இப்போதும் நினைவில்...




நீ பரிசளித்த -
புதுவருட டைரி,
அழகிய பார்க்கர் பேனா,
வண்ண கோலப்புத்தகம்,
பூக்கள் போட்ட கைக்குட்டை...
எல்லாம் மறந்து போயின -
நீ எனக்குப் போட்ட மூன்று முடிச்சோடு!

அன்று என்னிடம்
உன் காதலைச் சொல்ல
காலையில் கொடுத்து,
மாலையில் உதிர்ந்த
அந்த ஒற்றை சிகப்பு ரோஜா மட்டும்
இப்போதும் என் நினைவில்...!