Thursday 19 July, 2012

ஏனோ உறக்கமில்லை எனக்கு...




கருக்கிருட்டு தர்பார் நடத்தும்
அர்த்தஜாம வேளை.
ஏனோ உறக்கமில்லை எனக்கு...

நட்சத்திரங்களை எண்ணத் தொடங்குகிறேன்
உன் நினைவோடு!

முடிக்கும்முன்பே
விடிந்துவிட்டது பொழுது.
அதனாலென்ன...?

மொட்டைமாடியில்
இன்றும் எண்ணுவேன்
நட்சத்திரங்களோடு  உன்னையும்...!



Thursday 12 July, 2012

வார்த்தையை கண்டுபிடியுங்களேன்!!!

 
இது ஒரு மூன்றெழுத்து வார்த்தை.
கண்டுபிடியுங்களேன் !!!


இதன் -

ஆதியும் அந்தமும் சிறுவர்கள் கேட்பது!
(க_தை)
முதலும், இடையும் முழுச் சொல்லின் சுருக்கம்!
(கவி_)
இடையும், கடையும் விவசாயிக்குத் தேவை!
(_விதை)
முதலெழுத்து முதல் தமிழெண்!
(க_ _)
கடையானது உழவரின் விழாக்காலம்!
(_ _ தை)
அதுதான்...
(க-வி-தை-)
!!!

குறிப்பு:
விடையை சரிபார்க்க இரண்டு வரிகளுக்கு இடைப்பட்ட வெற்றிடத்தை 'செலக்ட்' செய்யவும்...
 
உபரிக்குறிபபு:
இது எனது பள்ளியிறுதியாண்டில் உருப்பெற்றது.

 

Thursday 28 June, 2012

மனதை அதிரவைத்த காதல் கதை ♥!!!





 
ஒரு அழகான கிராமம். (எப்படிப்பட்ட அழகுன்னு தெரிஞ்சுக்க இங்க கிளிக்-குங்களேன்) அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..அவளைப் போல் ஒரு அழகிய பெண்ணை யாரும் பார்த்ததும் இல்லை... கேட்டதும் இல்லை. அந்தப்பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது. (ஏன் இந்த எதிர்ப்பு? தெரிஞ்சுக்க இங்க கிளிக்-குங்களேன்). இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரைவிட்டு ஒட தீர்மானித்து ஒருநாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். 
உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர். அதைப்பார்த்த காதல்ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப்பட்ட ஊர்மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

  
திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப்பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்ணும் மனநிலை பாதிக்கப்பட்டாள். ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப்பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாள்.
திடீரென்று ஒருநாள்..
.
அப்பெண்ணின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்தக்கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது. இல்லாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது. அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்தநாள் அதே தேவதை அந்தப் பெண்ணின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது. ஆனால் அவரும் அதைக் கண்டுகொள்ளவில்லை.
அடுத்தநாள் அப்பெண்ணின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது. அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன்பிறகே, அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்ணும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்தநாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள். இருந்தும் கறை போகவில்லை.
  
அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்பெண் கதவைத் திறந்தாள். அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது. உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது...,

 
"லூசாடி நீ!, ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்."


-0-0-0-0-0-0-
  
இதைப் படித்ததும் உடனே  என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு! 
நானே இதை எனக்கு அனுப்பியவரைத் தேடிக்கிட்டு இருக்கேன்.
Untitled

Monday 25 June, 2012

ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தயாராகிறது...




நன்றி: திரு.தமிழருவி மணியன் - ஜூ வி - 27 06 12

 

                                          'ந்தியாவின் ஜனாதிபதி, இங்கிலாந்தின் முடிமன்னருக்கு இணையானவர். அவர் நாட்டின் தலைவரே அன்றி, நிர்வாகத் தலைவர் இல்லை. தேசத்தின் புறவுருவாய் தோற்றம் தரும் அவர், ஆட்சி செய்வது இல்லை. நாட்டின் அடையாளச் சின்னமாக விளங்கும் அவருடைய பெயரால் நிர்வாக முடிவுகள் மேற்கொள்ளப்படுவது வெறும் வினைமுறை ஏற்பாடு’ (ceremonial device) என்று அண்ணல் அம்பேத்கர் நவம்பர் 4, 1948 அன்று அரசியல் நிர்ணய சபையில் தெளிவுபடுத்தினார்! அமெரிக்க ஜனாதிபதியோ, நிர்வாகத் தலைவர். அமைச்சரவை அவருக்குக் கட்டுப்பட்டது. ஆனால், இந்தியக் குடியரசுத் தலைவர், அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டவர்; அமைச்சரவையின் அறிவுரைப்படி நடக்க வேண்டியவர். 

அரசமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி ஓர் அலங்கார பொம்மை என்ற கருத்தேற்றத்தை டாக்டர் ராஜேந்திர பிரசாத் அங்கீகரிக்க​வில்லை. அரசமைப்புச் சட்டத்தின் 74(1) உறுப்பு 'அமைச்சரவை, ஜனாதிபதிக்கு உதவவும், அறிவுரை வழங்கவும் உள்ளது என்று​தான் உரைக்கிறது. அதன் அறிவுரைப்படியே அவர் எப்போதும் செயற்படவேண்டும் என்று குறிப்பிடப்​படவில்லை’ என்பது ராஜன் பாபுவின் அபிப்ராயம் ஆகும்.நாட்டின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், முதல் பிரதமராக விளங்கிய ஜவகர்லால் நேருவுக்கு செப்டம்பர், 1952-இல் எழுதிய கடிதத்தில், 'சில தருணங்களில் ஜனாதிபதி சுயேச்சையாக முடிவெடுக்க வாய்ப்பு உண்டுஎன்று குறிப்பிட்டார். இந்தக்குறிப்பை நேருவால் ரசிக்க இயலவில்லை. ஆனாலும், தன் கருத்து வேற்றுமையை வெளிப்படுத்த நேரு தயங்கினார். காரணம், இருவரும் காந்தியப் படையின் தளகர்த்தர்களாக இருந்தவர்கள். ராஜன் பாபு, மூன்று முறை காந்தியால் காங்கிரஸ் தலைவராக்கப்பட்டவர். சட்டப் படிப்பில் டாக்டர் பட்டம் பெற்ற பிரசாத், அரசமைப்புச் சட்டத்துக்கு வடிவம் வழங்கிய அரசியல் நிர்ணய சபையின் தலைமை நாற்காலியை அலங்கரித்தவர். 

ராஜன் பாபுவுடன் மோதலைத் தவிர்க்க விரும்பிய நேரு, அவர் எழுதிய கடிதத்தின் நகலை அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி ஐயருக்கும், அன்றைய அட்டர்னி ஜெனரலாகப் பதவி வகித்த எம்.சி. செதல்வாடுக்கும் அனுப்பி வைத்து அவர்​களுடைய கருத்தை வழங்கும்படி வேண்டினார். 'நம் அரசமைப்புச் சட்டம் பிரிட்டிஷ் அமைப்பு முறையை முன்மாதிரியாகக் கொண்டு இருப்பதால், குடியரசுத் தலைவர் அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டியர் ஆவார்என்று இருவரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். ராஜன் பாபுவுக்கு இது மனநிறைவைத் தராவிடினும் நாட்டு நலனை முன்னிறுத்திப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆயினும், தான் ஓர் அலங்கார பொம்மை என்பதை இறுதிவரை அவர் ஏற்கவில்லை. உச்சநீதிமன்றம் 'சம்ஷேர் சிங் - இந்திய யூனியன்’ வழக்​கில், 'குடியரசுத் தலைவர், அமைச்சரவையின் முடிவு​களுக்கு ஏற்பவே செயற்பட வேண்டும் என்றும், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் 'ஜனாதிபதியின் மனநிறைவு’ என்பது அவரது தனிப்பட்ட மனநிறைவு அன்று; அமைச்சரவையின் மனநிறைவே’ என்றும் தெளிவுபடுத்தியது. ஆனாலும், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பவர் எந்த நேரத்​திலும் ஏதாவது ஒரு வழியில் அமைச்சரவைக்கு நெருக்கடியைத் தரக்கூடும் என்ற அச்சம் ஒவ்வொரு பிரதமருக்கும் அந்தரங்கமாக இருந்தது. இந்த அச்சம்தான் 'ரப்பர் ஸ்டாம்ப்’ மனிதர்களைத் தேர்ந்தெடுக்க அடித்தளமிட்டது.

ராஜன் பாபு, மத்திய அமைச்சரவையின் முடிவுகளுக்கு மறுப்பேதும் குறிப்பிடாத மௌனப் பார்வையாளராக வீற்றிருக்க விரும்​பவில்லை. அவருக்​கும் நேருவுக்கும் இடையில் அந்தரங்​கமான மோதல்கள் அடிக்கடி அரங்கேறின. கஜனி முகம்மதுவால் பாழாக்கப்பட்ட சோமநாதர் ஆலயம் புதுப்பிக்கப்பட்ட பணியில் நேருவின் விருப்பத்தை மீறி வெளிப்படையாகப் பங்​கேற்றார் பிரசாத். காசியில் சாமியார்கள் கால்களில் ஜனாதிபதி விழுந்து எழுந்ததை நேருவால் ஜீரணிக்க முடியவில்லை. ராணுவத்தளபதி திம்மையாவின் ராஜினாமா விவகாரம், திபெத் பிரச்னையில் நேருவின் அணுகுமுறை, கேரளாவில் 1959-ல் நம்பூதிரிபாட் தலைமையில் இயங்கிய கேரள அரசைக் கவிழ்த்தது போன்றவற்றில் அமைச்சரவை முடிவுகளை மனநிறைவுடன் ராஜன்பாபு ஏற்கவில்லை. தன் விருப்பங்களுக்குத் தலை அசைக்காத அவரை, இரண்டாவது முறை ஜனாதிபதியாக்க நேரு விரும்பவில்லை. ஆனால், மௌலானா அபுல்கலாம் ஆசாத் வற்புறுத்தியதால் ராஜன்பாபு மீண்டும் ஜனாதிபதியாய் நீடிக்க  விருப்பம் இல்லாமல் பணிந்து கொடுத்தார் நேரு. மூன்றாவது முறையும் பிரசாத் பதவியில் தொடர விரும்பிய போது, நேரு பச்சைக்கொடி காட்டவில்லை. தொடர்ந்து 12 ஆண்டுகள் (1950-62) ஜனாதிபதி பதவியில் பவனி வந்தவர் பாபு ராஜேந்திர பிரசாத் ஒருவர் மட்டுமே.

தத்துவமேதை ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி -யானால் தனக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று நேரு நம்பினார். ஆனால், சீன ஆக்கிரமிப்பில் இந்தியாவின் கௌரவம் களங்​கமுற்றபோது ராதாகிருஷ்ணன், நேருவின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்றார்; பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ணமேனன் பதவி விலக வேண்டும் என்று பிரதமருக்கு அழுத்தம் கொடுத்தார். நேரு, சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய மூவரும் ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியாக இருந்தபோது பிரதமர்களாகப் பதவி வகித்தனர். இந்திரா காந்தியின் அரசியலும் ஆட்சி நிர்வாகமும், உயர்ந்த லட்சியங்களில் பிடிப்புள்ள ராதாகிருஷ்ணனுக்கு ஏற்புடையதாக இல்லை. பொறுப்பில் இருந்து விலகுவதற்கு முன்பு தன்னுடைய இறுதிக் குடியரசு நாள் உரையில் 'நிர்வாகத் திறமையற்ற அரசுஎன்று வெளிப்படையாகவே விமர்சித்தார் அந்தத் தத்துவ ஞானி.

ராஜன் பாபுவுக்குப் பின், துணை ஜனாதிபதியாக இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி யானார். அவருக்குப் பின், துணை ஜனாதிபதி ஜாகீர் உசேன் ஜனாதிபதியானார். பிரசாத், சட்ட நிபுணர். ராதாகிருஷ்ணனும், ஜாகீர் உசேனும் உன்னதமான கல்வியாளர்கள். அரசியல் சூழ்ச்சி​களுக்கு அப்பாற்பட்ட குடியரசுத் தலைவர் பதவியை அலங்​கரித்த முதல் மூவரும் அந்தப் பதவிக்குரிய கௌரவத்தைக் காப்பாற்றியவர்கள்; நாட்டு நலனைப் பெரிதாக நினைத்​தவர்கள்; பதவியைக் காப்பாற்றிக்கொள்ளப் பிரதமரின் கைப்பொம்மையாக இருக்க விரும்பாதவர்கள்.

 ஸ்டாம்புகளில்... "ரப்பர் ஸ்டாம்பு"களை உருவாக்கியவர்கள்


இந்திராகாந்தியின் ஆட்சிப்படலம் ஆரம்​பமானது. குடியரசுத் தலைவர் கொலு பொம்மை ஆக்கப்பட்டார். நேரு, ராஜேந்திர பிரசாத் இணக்கமாக இல்லாத​ போதும் 12 ஆண்டுகள் பொறுமை காத்தார். அவருடைய மகள் இந்திரா காந்தியால்ராதாகிருஷ்ணனை ஓர் ஆண்டுகூட ஏற்கமுடியவில்லை. பதவி நாற்காலிக்குப் பெருமை தேடித் தந்த தத்துவ ஞானியை இரண்டாவது முறை ஜனாதிபதியாக்க இந்திரா விரும்பவில்லை. அவருடைய மருமகள் சோனியாகாந்தி, இளைஞர்களால் ஆராதிக்கப்படும் அப்துல்கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க இசையவில்லை. நேரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் ஜனாதிபதி தேர்வும் அரசியலாக்​கப்பட்டது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகிய மூவருமே  ஜனாதிபதியை ரப்பர் ஸ்டாம்பாக மாற்றிய பெருமைக்கு உரியவர்கள்(!)

காங்கிரஸை 1969-ல் இரண்​டாகப் பிளந்து, கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடிக்க, வி.வி.கிரியைத் தேர்தலில் நிறுத்தி, மனசாட்சிப்படி வாக்களிக்கும்படி காங்கிரஸ்காரர்களைத் தூண்டிவிட்டு, தான் ஆடிய அரசியல் சதுரங்கத்தில் ஜனாதிபதி பதவியைப் பகடைக்காயாக மாற்றியவர் இந்திரா காந்தி. அன்றுதான் வி.வி.கிரி வடிவத்தில் ஜனாதிபதி, ரப்பர் ஸ்டாம்ப் ஆனார். சூத்திரத்தமிழர் காமராஜரும், சூத்திரக் கன்னடர் நிஜலிங்கப்பாவும் நிறுத்திய வேட்பாளர் ஆந்திர சூத்திரர் சஞ்சீவ ரெட்டி. அவரைத் தோற்கடிக்க, ஆரிய பிராமணப் பிரதமர் இந்திரா காந்தியின் பிராமணப் பிரதிநிதி வி.வி.கிரியை ஆதரித்த 'திராவிட சூத்திரத் தலைவர்கருணாநிதியின் 138 சட்டப் பேரவைஉறுப்பினர்களும், 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அளித்த ஆதரவுவாக்குகள்தான் இந்திய அரசியலின் ஆரோக்கியத்தை அழிப்பதற்குக் காரணமானது. அன்று காமராஜ் என்ற சூத்திரத் தமிழனின் அகில இந்திய செல்வாக்கை அழித்தொழிக்க பிராமணர் வி.வி.கிரியை வெற்றி பெறச் செய்த திராவிட சூத்திரர்கருணாநிதி, இன்று அரிய மானுடப் பண்புகள் நிறைந்த நேரிய தமிழர் அப்துல் கலாமை மறுதலித்து, வங்கத்துப் பிராமணர் பிரணாப்குமார் முகர்ஜியை வரவேற்கிறார்.அவரை ஜனாதிபதியாக்க, சொக்கத்தங்கம் சோனியா காந்தியின் பக்கம் நின்று படை திரட்டுகிறார். கருணாநிதியின் திராவிடத் திருவிளையாடல் குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில் காண்பதற் காணீரோஎன்று பாட வேண்டியதுதான் பாக்கி. 

இந்திராகாந்தியால் ஜனாதிபதியான வி.வி.கிரி நன்றிக் கடனாற்றுவதற்காக, விரும்பியே ரப்பர் ஸ்டாம்பாக மாறினார். ஆனால், அவராலும் ரயில்வே வேலை நிறுத்தத்தை இந்திரா காந்தி கையாண்ட விதத்தை வரவேற்க முடியவில்லை. குஜராத் மாநில அரசுக் கவிழ்ப்பில் கிரியின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டது. 'ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றத் தவறி விட்டதுஎன்று அவர் செய்த விமர்சனம் இந்திரா காந்தியின் கசப்பைத் தேடிக்கொண்டது. கிரியைவிட அழுத்தமான ரப்பர் ஸ்டாம்பை அடுத்து இந்திரா தேடியபோது பொருத்தமாகக் கண்டெடுக்கப்பட்டவர்தான் பக்ருதீன் அலி அகமது. இந்திரா காந்தி ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்து நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்த முனைந்தபோது, மறுப்பின்றிக் கையப்பமிட்ட மகாவிசுவாசி அவர். அவரை விடவும் விசுவாசி தேவைப்​பட்டபோது இந்திராவின் கண்களில் தட்டுப்​பட்டவர்தான் கியானி ஜெயில்சிங். 'இந்திரா காந்தி விரும்பினால் அவருடைய அறையில் துடைப்பம் பிடித்துப் பெருக்கவும் தயங்க மாட்டேன்என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்த ஜெயில் சிங்குக்கு இணையாக யாரே இருக்க வல்லார்! அன்று இந்திரா காந்தியின் கண்டுபிடிப்பு ஜெயில்சிங், நேற்று சோனியாவின் கண்டுபிடிப்பு 'உலகம் சுற்றியபிரதீபா பாட்டீல். இந்திய அரசியலில் இந்திரா குடும்பத்துப் பங்களிப்பை நினைத்தாலே நெஞ்சு 'இனிக்கிறது’!

 
இன்று, சோனியா விரும்பி அறிவித்த மனிதர் அல்லர் பிரணாப் முகர்ஜி. அவருடைய ஆசை அமைதியின் வடிவம் ஹமீது அன்சாரியை ஜனாதிபதி​யாக்குவதுதான். முலாயம் சிங்கும் மம்தாவும் அவருடைய ஆசையை நிராசையாக்கி விட்டனர். பிர​ணாபின் திறமையை விட அன்சாரியின் அடக்கம்தான் சோனியாவுக்குத் தேவை. ஏன் பிரணாபிடம் சோனியா அஞ்சவேண்டும்? ரப்பர் ஸ்டாம்ப் பதவி, அலங்கார பொம்மைப் பதவி என்றாலும் ஜனாதிபதி பதவி ஓரளவு கூர் தாங்கிய கத்தி. அதைக்கொண்டு கொஞ்சமாவது பயமுறுத்த முடியும். அனுபவத்தில் சோனியா காந்தி அதை அறிவார். இந்திரா காந்தியால் தோற்கடிக்கப்பட்ட சஞ்சீவ ரெட்டி, ஜனதா ஆட்சியின் கருணையால் குடியரசுத் தலைவரானார். கட்சிக்குள் நேர்ந்த குழப்பத்தால் மொரார்ஜி தேசாய் பிரதமர் பொறுப்பில் இருந்து விலகியதும், ஜகஜீவன்ராம் ஆட்சியமைக்க ஆதரவு எம்.பி-க்கள் பட்டியலுடன் ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர், சஞ்சீவ ரெட்டியைச் சந்தித்தபோது அவர் ஏற்க மறுத்தார். கோபத்துடன் வெளியேறிய சந்திரசேகர், ஜனாதிபதி மாளிகையின் வெளியே பத்திரிகையாளர்களிடம், ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பொங்கினார். தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்தது சஞ்சீவ ரெட்டி கத்தி. 

இந்திராகாந்தியின் தீவிர விசுவாசி ஜெயில்சிங், ராஜீவ்காந்தியின் ஆட்சியைக் கவிழ்க்க ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தப் பார்த்தார். ராஜீவ், ஜெயில் சிங்கை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. பிரதமர் நாட்டு நடப்புகளை, நிர்வாக முடிவுகளை அவ்வப்போது ஜனாதிபதியைச் சந்தித்துப் பரிமாறிக் கொள்ளும் நடைமுறையை ராஜீவ் புறக்கணித்தார். 'மரபை உடைக்கலாமா?’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டபோது, 'நான் பல மரபுகளை உடைத்தவன்என்றார் ராஜீவ். ஜெயில்சிங் இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதை அவர் தடுத்தார். நேரம் பார்த்துக் காத்திருந்த ஜெயில் சிங்குக்கு, போஃபர்ஸ் ஊழல் கைகொடுத்தது. 'ஊழல் மலிந்த நிர்வாகம்என்று குற்றம் சாட்டி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜீவ் அரசை 'டிஸ்மிஸ்’ செய்யவும், வெங்கட்ராமனைப் பிரதமராக்கவும் முடிவெடுத்தார். இதை அறிந்த ராஜீவ் காந்தி அதிர்ந்து போனார். நாடாளுமன்றத்தின் அதிகாரத்​தை ஜனாதிபதி பயன்படுத்த முடியாது என்று கிடைத்த அறிவுரையால், ஜெயில் சிங்கின் பழிவாங்கும் புத்தி தெளிந்தது. இந்தச் சதி குறித்து அவருக்குப் பின் பொறுப்பேற்ற ஆர்.வெங்கட்ராமன் ‘My Presidential years’ என்ற நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கும் ஆட்சியாளரை அச்சுறுத்தும் அதிகாரம் உண்டு. மென்மையான தண்ணீரில் பாறையைத் தகர்க்கும் வன்மை மறைந்திருக்கிறது என்கிறார் சீனஞானி லயோட்சு. அதைப் போல! 

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்வில் காங்கிரஸ் கூட்டணி பெரிய வெற்றியைப் பெற முடியாமல் போகலாம். தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம். அந்த நேரத்தில் ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவரின் ஒத்துழைப்பு முக்கியம். அதற்கு ஒரு பூரண விசுவாசி அந்த நாற்காலியில் அமர்வது நல்லது. பிரணாப் முகர்ஜி தன் மேதைமையை மூட்டை கட்டி மூலையில் வைத்துவிட்டு 'முதல்தர விசுவாசிமுகமூடியை அணிந்துகொள்ளத் துணிந்து விட்டார். அவர் ஜனாதிபதியாவது நிச்சயம். சோனியா காந்தி கம்பெனியில் தயாரான அக்மார்க் முத்திரையுடன் கூடிய அடுத்த ரப்பர் ஸ்டாம்பை ஜனாதிபதி மாளிகையில் அமரச்செய்து அழகு பார்க்க நாடு தயாராகி விட்டது. இன்னொரு சஞ்சீவ ரெட்டியும், ஜெயில் சிங்கும் மீண்டும் உயிர்த்தெழுவார்களா?

காலம்தான் விடை சொல்ல வேண்டும்!



Tuesday 19 June, 2012

பார்த்தேன்...ரசித்தேன்...


மர இலைகளுக்கிடையே வழிதேடிய
ஒளிக் கீற்றுகளை ரசித்தேன்.

புல்லின் நுனியில் ஊஞ்சலாடும்
பனித்துளியை ரசித்தேன்.

விருந்தினர்போல் வந்துசெல்லும்
வானவில்லை ரசித்தேன்.

வான்வெளியில் விதைக்கப்பட்ட
முத்துக்களை ரசித்தேன்.

ஓசையில்லாமல் தேகம் தழுவும்
தென்றலை ரசித்தேன்.

வண்ணங்களைச் சுமந்துவரும்
வண்ணத்துப் பூச்சியை ரசித்தேன்.

மழலைகள் பேசும்
புரியாத மொழியையும் ரசித்தேன்.

இரவில் கண்ணாமூச்சியாடும்
மின்மினிகளை ரசித்தேன்.

எல்லாவற்றையும் ரசித்தேன்...
உன்னை ரசிக்கும் வரை!














நன்றிகள்: 
1. பட்டாம்பூச்சி படத்திற்காக... முத்துச்சரம் ராமலக்ஷ்மிக்கு.
2. மற்ற அனைத்திற்கும்...  கூகுள் ஆண்டவருக்கு.

Friday 15 June, 2012

மா கனல்கள் !



இந்திரனின்
இச்சைக்கு இணங்க...
நாங்கள் அகலிகைகளல்ல !
சிதையேறி
சிறந்தவளென நிரூபிக்க...
நாங்கள் சீதைகளுமல்ல !

மாதவியிடம் மயங்கிய
கோவலனை மன்னிக்க...
நாங்கள் கண்ணகியுமல்ல !
ஐவர் தலைவன்
அவையில் சூதாட...
நாங்கள் பாஞ்சாலியுமல்ல !

அடிமைத்தளையகற்றி,
தன்மானங்காக்க...
புரட்சிக் கொடியேந்தி வரும்
நாங்கள் -
மா கனல்கள் !

ஊசிக்குறிப்பு : 
1990-களின் இறுதியில், எனது கல்லூரிப் பருவத்து வரிகள் இவை.


Wednesday 6 June, 2012

எனக்கு மட்டும் நான்!



சிவப்புமல்ல...வெளிருமல்ல...
பச்சைத் தமிழனின் கருப்பு நிறம்.

கலையாமல் வகிடெடுத்து
உருக்குலையாமல் படிந்த கேசம்.

முட்டையையும், சட்டத்தின்
ஓட்டையையும் நினைவுபடுத்தாத
ஆழமான விழிகள்.

நீளமுமல்ல...அகலமுமல்ல...
நேர்த்தியான நாசி.

காதோரம் வரை கிழியாமல்
அளந்தெடுத்த அதரங்கள்.

ஆணென்ற அடையாளத்திற்கு
அழகாய் அரும்பு மீசை.

பிரிவென்பதே இல்லாமல்
பிணைந்து இருக்கும் வளைபுருவங்கள்.

 என -

அழகாய்த்தான் தெரிகிறேன்
கண்ணாடியில் -
எனக்கு மட்டும் நான்!

ஊசிக்குறிப்பு:  
பள்ளிப்பருவத்தின் விளிம்புகளில், என் தாழ்வுமனப்பான்மையில்  எழுதப்பட்டது இது.
பின்னாட்களில், நல்ல நண்பர்களாலும், புத்தகங்களாலும் அதிலிருந்து வெளிவந்திருக்கிறேன்.
இப்போது இந்த புகைப்படத்திலிருக்கும் கருத்துதான் எனதும்.

Thursday 31 May, 2012

பந்தம் எப்போதும் தொடர்கதைதான்...



என் -  
தொப்புள் பந்தம்
தொட்டிலில் அழுகிறது.
பசியை அடக்க
பாய்ந்து வா என்று!

என் -
கட்டில் பந்தம்
கனவோடு காத்திருக்கிறது.
காமத்தீயை அணைக்க
காதல் நீராய் வா என்று!

என் -
கடமை பந்தம்
கர்ஜனையோடு விரட்டுகிறது.
இருக்கும் வேலைகளை
இயந்திரமாய் முடி என்று!

என் -
உரிமை பந்தம்
உலக்கையை இருக்கிறது.
கட்டிக்கொடுத்ததோடு
கடன் தொலைந்ததென்று!

என் -
மூளை பந்தம்
முணுமுணுக்கிறது வேதனையாய்.
நால்வரும் வேண்டும்...
நான் என்ன செய்யவென்று!




 

Wednesday 23 May, 2012

முரண்பாடான வாழ்க்கை


 
நிலவில் கறை.
கதிரவனில் கரும்புள்ளி.
துன்பத்தில் இன்பம்.
தடைக்கல்லில் படிக்கல்.

தேடிப்பார்த்தால்
முரண்பாடுகளைப் போலவே
எல்லா இடங்களிலும்
ஒளிந்திருக்கிறது வாழ்க்கை.

ஒருவேளை -
முரண்பாடுகள் தானோ வாழ்க்கை?



Tuesday 22 May, 2012

பணவீக்கம் - ஒரு எளிய விளக்கம்




ஒரே ஒரு உலகத்தில ஒரே ரு தீவு இருந்தது, (ஹி.. ஹி..) அந்தத் தீவில மூணு பேரு இருந்தாங்க. நம்பியார், நாகேஷ், சிவாஜி. நம்ம நம்பியார்க்கு அந்த தீவில் இருக்கிற நிலம் சொந்தம். நாகேஷ் கிட்ட ஒரு 100 ரூபா பணம் இருந்திச்சி. சிவாஜி கிட்ட 100 ரூபா பணம் இருந்திச்சு.

அப்ப தீவோட பணமதிப்பு 200 ரூபாய்.
சிவாஜி குடும்பஸ்தர்.. சரி சரி சும்மா பணமா வைக்காம நிலம் வாங்கிப் போடலாம்னு 100 ரூபாயைக் கொடுத்து நம்பியார்கிட்ட இருந்து நிலத்தை எழுதி வாங்கிட்டாரு. நம்பியாரும் சந்தோஷமா வித்துட்டாரு.. விடலைப் பையனாச்சே.. அப்ப தீவோட மதிப்பு 300 ரூபாய் (நில மதிப்பையும் சேர்த்து). நாகேஷ் யோசிச்சாரு.. ஆஹா நிலம் மதிப்பு உயருமே அப்படின்னு நம்பியாரை தாஜா பண்ணி 100 ரூபா கடன் வாங்கி 200 ரூபா குடுத்து சிவாஜி கிட்ட நிலத்தை வாங்கிட்டாரு.
 
இப்ப நிலத்தோட விலை 200 ரூபா. சிவாஜி கிட்ட இருநூறு ரூபா. ஆக, தீவோட மொத்த மதிப்பு 400 ரூபா ஆச்சு. நாகேஷ், நம்பியார்க்கு 100ரூபா தரணும். நம்பியார்க்கு வேற சொந்த இடம் இல்லாததால கல்யாணம் தட்டிப் போயிகிட்டே இருந்ததா, மெல்ல சிவாஜியை நைஸ் பண்ணி 200 ரூபா கடன் வாங்கினாரு.. நாகேஷ் மொதல்லயே 100 ரூபா தரணும் இல்லியா? அதோட சேர்த்து 300 ரூபாய்க்கு நிலத்தைப் பேசி முடிச்சாரு..
இப்ப தீவோட மதிப்பு, நிலம் 300 ரூபா, நாகேஷ் கையில 200 ரூபா ஆக 500 ரூபா ஆயிடுச்சி.. நம்பியார், சிவாஜிக்கு 200 ரூபா தரணும். அடுத்து சிவாஜி, நம்பியார்கிட்ட இருந்து அந்த நிலத்தை வாங்கினாரு. எப்படிநாகேஷ்கிட்ட 200 ரூபா கடன் வாங்கி. நம்பியார் ஏற்கனவே 200 ரூபா தரணுமே அதையும் காட்டி 400 ரூபாய்க்கு வாங்கிட்டார். நிலம் சிவாஜிக்கு 400 ரூபாய். நம்பியார் கையில 200 ரூபாய். தீவோட மதிப்பு 600 ரூபா. சிவாஜி, நாகேஷ்க்கு 200 ரூபா தரணும். இப்படி சிவாஜி, நாகேஷ், நம்பியார் மூணு பேரும் மாத்தி மாத்தி ஒருத்தர்கிட்ட ஒருத்தர் வாங்கி வித்ததினால நிலத்தின் விலை 5000க்கு மேல எகிறிடுச்சி.. ஒருத்தொருக்கொருத்தர் கொடுக்க வேண்டிய கடனும் எகிறிடுச்சி..

இன்றைய நிலை. நிலம் சிவாஜி வசம். மதிப்பு 5000 ரூபாய்.
சிவாஜி நாகேஷ்க்கு தரவேண்டியது 200 ரூபாய்.  
ஆகத் தீவின் மதிப்பு 5200 ரூபாய்.  

நம்பியார் கையில 200 ரூபா இருக்கு. நாகேஷ்க்கு சிவாஜி 200 ரூபா தரணும். நம்பியார்க்கு நிலம் வாங்கற ஆசையே போயிடுச்சி. நாகேஷ் பணம் கேட்டு நெருக்கறாரு. சிவாஜிக்கோ நிலத்தை விக்க முடியலை. என்ன செய்ய? கடன் கொடுத்த நாகேஷ் கையில ஒண்ணுமில்லாம பூவாவுக்கு சிங்கியடிக்க ஆரம்பிச்சிடறார். உடனே சிவாஜி மேல கேஸ் போடறாரு. சிவாஜி வேற வழியில்லாம நிலத்தை நாகேஷ்-க்கே எழுதிக் கொடுத்துட்டாரு..

இப்போ பணமா நம்பியார்கிட்ட 200 ரூபா இருக்கு.
நாகேஷ் கிட்ட மதிப்பே இல்லாத நிலம் இருக்கு.
சிவாஜி போண்டி ஆயிட்டாரு
தீவின் பணமதிப்பு மறுபடியும் 200 ஆயிடுச்சி.
ஆக, 200 ரூபா வீங்கி வீங்கி 5200 ஆகி திடீர்னு வெடிச்சு சுருங்கி மறுபடி 200ரூபா ஆயிடுச்சி. முழிச்சுகிட்ட நம்பியார் பொழைச்சுகிட்டான். அவன் தான் இப்பொ தீவோட பணக்காரன். சொத்தை கடைசியா வாங்கிய சிவாஜி சொத்தையாகிட்டாரு. மாட்டிகிட்டு முழிச்ச நாகேஷ் பொறம்போக்கு...... நிலத்திற்கு சொந்தக்காரர் மாதிரி ஆயிட்டாரு.

இந்தக் கதை எங்கேயோ கேட்ட கதை மாதிரி இருக்குங்களா? இதுதானே தினம் தினம் நடக்கிற பங்குச்சந்தை வியாபாரம், சொத்துவியாபாரம் இப்படி. இதை ஸ்பெகுலேஷன் மார்க்கெட் அப்படின்னுச் சொல்றாங்க.. இதில இருந்த் தப்பிக்க வழி இருக்கா? இருக்கு மாதிரியும் தெரியுது இல்லாத மாதிரியும் தெரியுது, ஆனா இந்தப் பணம் சுத்துற சுத்துல தலை சுத்துதுங்களே.. பூமி, சூரியன், நட்சத்திரக் கூட்டங்கள், பேரண்டம் எல்லாம் இதனாலதான் கிறுகிறுத்துப் போய் சுத்திகிட்டே இருக்குதுங்களாம். எதுக்கும் கொஞ்சம் உட்கார்ந்து ஒரு டம்ளர் ஜில்லுன்னு மோர்குடிச்சு ஆசுவாசப்படுத்திகிட்டுப் போங்க.
  --0--  --0--  --0--  --0--  --0--  --0--  --0--  --0--  --0--  --0--  --0-- --0--
(மின்னஞ்சலில் வந்தது...)