Thursday 29 September, 2011

மூஞ்சிப் புத்தக நொறுக்'ஸ்

மூஞ்சிப் புத்தகத்தில் நண்பர்களோடு பகிர்ந்துகொண்ட சில சிந்தனைகளை இங்கே பதிவிலும் உங்களோடு...


  • வீட்டுக்கு ஒரு மரம் மட்டுமல்ல... மனிதமும் வளர்ப்போம்.
  • சக ஆண் அலுவலருக்கு திருமணம் நிச்சயமானால், பெண்ணின் புகைப்படத்தை கேட்டு வாங்கிப் பார்க்கும் சக பெண் அலுவலர்கள், தங்களுக்கு திருமணம் நிச்சயமாகும்போது (சக ஆண் அலுவலர்கள்) மாப்பிள்ளையின் புகைப்படத்தை கேட்டாலும் காட்டுவதேயில்லை.
  • ஆறாம்நாள் கடவுள் மண்ணால் மனிதனைப் படைத்தார்.                                                                                        ஏழாம்நாள் மனிதன் கல்லால் கடவுளையும் அவ்வண்ணமே.
  • பிறப்பிடம் விட்டு பிழைப்பிடம் நோக்கிய பயணத்தில் கரைந்து கொண்டிருக்கிறது இந்த இரவு.  கடந்த கால நிகழ்வுகள் குறித்த எண்ண அலைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் அவற்றிலேயே உழன்று கொண்டிருக்கின்றன யதார்த்தக் கிளிஞ்சல்கள்.
  • கிராமங்களின் ஊடாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். பாளம்பாளமாய் வெடித்துக் கிடக்கும் விவசாய பூமிக்காகவும் வீட்டுமனைகளாகும் விளைநிலங்களுக்காகவும் வருத்தப்படும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் நேசம் சிலிர்ப்பூட்டுகிறது.
  • யாரையோ பார்த்து நீ பிரம்மிக்கும் அதே விநாடியில், உன்னைப் பார்த்தும் யாரோ பிரம்மிக்கிறார்கள்!
  • "உனக்கு எத்தனை கேர்ள் ஃப்ரண்ட்?" என்ற கேள்விக்கு "ஒருவரும் இல்லை" என்ற பொய்யையே எப்போதும் சொல்லத்தூண்டுகிறது சமூகத்தின் மாறுகண்.
  • எத்தனை அழுத்தி எழுதினாலும், காகிதத்திற்கு புரியவில்லை காதலின் வலி.
  • எல்லாத் தோல்வியிலும் ஏனிப்படி, ஏனிப்படி என்று உன்னையே நீ கேள். அதுதான் உன் வெற்றியின் ஏணிப்படி!
  • இந்தப் பூனை அழகிகளுக்கு ஆப்பிள் கொடுக்கும் சாத்தான் கடவுளாகட்டும்... # Catwalk babies in Fashion show.
  • என் கால்களுக்கு எதிரான திசையில் இருக்கிறது இலக்கு... ஆனாலும் தேடலோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது பயணம்...
  • எல்லோருடைய இறந்தகாலத்திலும் ஒரு நஷ்டக் கணக்கு இருக்கத்தான் செய்கிறது. மீள்கிறவர்கள் வாழ்கிறார்கள். மீளாதவர்கள் வாழ்க்கையை தள்ளுகிறார்கள்.
 நன்றி: மூஞ்சிப்புத்தகம் வார்த்தைக்காக சகோ.ம.தி.சுதா -க்கு.

No comments: