Friday 4 November, 2011

மழையாடிய பொழுதுகள்

 
நேற்று பெய்த மழையில் 
இன்னமும் நனைந்துகொண்டிருக்கிறது உயிர்.
சொட்டுச்சொட்டாய் உன் நினைவுகள்.
நீ பிரிவறிவித்த மழைநாளின் இரவை -
மூன்று வருடங்களுக்குப் பிறகு 
நினைவுபடுத்தியிருக்கிறது இந்த மழை.

கூடவே...
உன்னோடு கழித்த விடுமுறை நாட்களின் 
மழைநேரப் பின்மதியங்களையும்...
மழை எப்போதும் மழையாகவே இருக்கிறது.

எப்போதாவது ரசிக்கக் கிடைக்கிற 
தாழ்வாரத் தூவானங்களில்
தெறித்தலைகிறது உன் முகம்.
யாருமற்ற பகல்களில் வரும் மழையை நீ ரசிக்கிறாயா?

வாசனைகளோடு வந்து ஜன்னல் நனைக்கிற 
சாரல்களுக்குத் தெரியவில்லை...
நீ இப்போதெல்லாம் அறைக்கு வருவதில்லை என்பதும் -
மழைக்கும் உனக்குமான சினேகம்
மறக்கப்பட்டுவிட்டதையும். 

நனைந்துகொண்டே பேசிவந்த புதன்கிழமை...
ஈரம் காயும்வரை இருந்துவிட்டுப் போன நூல்நிலையம்...
நூல்நிலையத்து விகடனில் வாசித்த மழை கவிதை...
தகரக் கூரையில் விழுந்த துளிச் சப்தங்கள்...
விடைபெறும்வரை பிரியாமலிருந்த இடதுகைகளின் வெப்பம்... 
விடைபெறும் தருணத்தில் நிகழ்ந்த குளிர்விட்ட முத்தம்...

இங்கே எப்போதாவது வருகிற மழையும் 
இவ்வளவையும் கொண்டுவருகிறது...
உன் கடிதங்களைத் தவிர.

- சிசு...


2 comments:

நிலாமதி said...

அழகான வர்ணனை.....

சோகம் நினைவு படுத்தும் மழை.

Learn said...

அழகிய வரிகள் உள்ளத்தை தொட்டு சென்றது சிசு... பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in