Tuesday 13 July, 2010

காதல் மழை


மழை வருவது மயிலுக்கு தெரியுமாம்.
காதல் மழை வருகிறதே! மனசுக்கு தெரியுமா?

உன் கண்கள் சொன்ன வானிலை அறிவிப்பு படி,
இனி எனக்குள் இடி, மின்னலுடன் காதல் மழைதான் போ!

மழை வந்தவுடன் -
கப்பல் செய்ய துவங்குவர் சிறுவர்கள்.
காதல் செய்ய தொடங்குகிறேன் நான்.

நீ என்பது பெரியவொரு மழைத்துளி.
மழை என்பது சின்ன சின்ன நீ.

இரண்டு இமைகளையும் குடையாய் விரிக்கிறாய்.
பெய்யத் துவங்குகிறது காதல் மழை.

ஜன்னல் கம்பிகளில் துளிர்த்த நீர்த்துளிகளை
சுண்டுவிரலால் நீ சுண்டி விடும்போது,
கம்பிகள் எல்லாம் வீணை தந்திகள் ஆகிவிட்டன.

கிளிப் பேச்சு தெரியும் -
ஜன்னலோர மழையோடு பேசுகிறாயே..
இதென்ன துளிப் பேச்சா?

மழையை ரசிப்பதாய் நினைக்கிறாய் நீ.
உன்னை ரசிப்பதற்காகவே உருகி வழிகிறது மழை.

யாரோ கூப்பிட்டதுபோல்...
தரை வந்த மழை நீர், தலைதெறிக்க ஓடும்.
கண்ணடித்துக் கூப்பிட்ட கடல் நீதானா?

எங்கே?
ஆகாயத்தைப் பார்த்து கைதட்டு.
ஆட்டோ மாதிரி ஆலங்கட்டி மழை வரட்டும்.

கூந்தல் முகில்... புன்னகை மின்னல்...
வெட்க வானவில்... காதல் மழை.

மண் வாசம் வருகிறது.
ஓ! மழை வரப் போகிறது.

மழை வரும்போது வெளியே வர சிணுங்குவாய்.
நீ வெளியே வரும்வரை சிணுங்கிக் கொண்டுதான் இருக்கும் மழை.

அடிக்கும் மழையில் வானத்தில் இருந்து வழுக்கி வந்தது நிலா...
பேருந்து நிறுத்தத்தில் பரிதவிப்போடு நீ!

மழைக்கு ஒதுங்கி இருப்பது நீ என்று தெரிந்தால்,
மழையே கொஞ்சநேரம் ஒதுங்கி நின்றிருக்குமே!

மழை உன்னை தீண்டும்போது என்ன நினைக்கும்?
"ஆஹா! பூமி எவ்வளவு மொழு மொழுவென்று இருக்கிறது" என்றா?

நீயே குடை பிடித்தால் பூமிக்கு வந்த மழை,
ஜென்ம சாபல்யம் பெறுமா?

சொல்லிவைத்த மாதிரி,
என்னை பற்ற வைப்பதற்காகவே நீ நனைவாய் போலும்.
நனையும்போது கூடுதல் அழகாகின்றன...
ஈரமான நந்தவனங்களும், இறுக்கமான சுடிதார்களும்.

மழைநீர் குழப்பிய மணலில் உனது கால்தடம்...
சேற்றில் மலர்ந்த செந்தாமரை இதுதானோ?

இன்னும் கொஞ்சநேரம் மழையில் நின்றால்,
ஜலதோஷம் பிடித்துவிடும். மழைக்கு...!

ஓட்டுத் திண்ணையில் சொட்டும் மழைத் தண்ணீர் போல் என்னுள் நீ.
அதை பிடித்து வைக்க -
குடம் போதாது. கடல் கொண்டு வா!

விண்மீன்களை எண்ணியபடி
விடிய விடிய நீயும், நானும்
மழையை ரசித்த நாளோடு முடியட்டும் பூமி.

மழை வரவேண்டுமென்று
கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைப்பவர்கள்...
உனக்கும் எனக்கும் அதைச் செய்தாலென்ன...?

மழை வருகிறதோ, இல்லையோ?
மழலை வரும்!

2 comments:

kumaran said...

super.....

சிசு said...

நன்றி குமரன்... தொடர்ந்து வாருங்கள். ஊக்கப்படுத்துங்கள்.